கடத்தூர்: சாகுபடிக்கு குறைந்த அளவு தண்ணீர் தேவை மற்றும் நல்ல விலை கிடைப்பதால், கடத்தூர் சுற்றுவட்டார பகுதியில் விவசாயிகள், அதிகளவி–்ல் முள்ளங்கி சாகுபடி செய்துள்ளனர். பாப்பிரெட்டிப்பட்டி தாலுகா கடத்தூர் சுற்றுவட்டாரத்தில் உள்ள ஒடசல்பட்டி, மணியம்பாடி, சில்லரஹள்ளி, புட்டிரெட்டிப்பட்டி, ராமியணஅள்ளி உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட கிராமங்களில் சுமார் 1000க்கும் மேற்பட்ட ஏக்கரில் விவசாயிகள் முள்ளங்கி பயிரிட்டுள்ளனர். தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம் உள்ளிட்ட பகுதிகளுக்கு முள்ளிங்கியை விற்பனைக்கு அனுப்புகின்றனர். தற்போது மார்க்கெட்டில் முள்ளங்கிக்கு மக்களிடையே பெரும் வரவேற்பு உள்ளதால், விவசாயிகள் முள்ளங்கி சாகுபடியில் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.
இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், முள்ளங்கியில் நீர்சத்து அதிகமாக உள்ளதால், பொதுமக்கள் அதிகம் வாங்கி பயன்படுத்துகின்றனர். பொதுவாக முள்ளிங்கி 40 நாட்களில் அறுவடைக்கு தயாராகி விடும். ஒரு ஏக்கரில் முள்ளிங்கி பயிரிட ₹7 ஆயிரம் வரை செலவு ஆகிறது. ஏக்கருக்கு ₹30 ஆயிரம் முதல் ₹40 ஆயிரம் வரை லாபம் கிடைக்கும். மற்ற பயிர்களை விட, முள்ளங்கி பயிரிட தண்ணீர் தேவை குறைவு என்பதால், முள்ளங்கி பயிரிடுவதில் விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர். தற்போது வியாபாரிகள் முள்ளிங்கி கிலோவை ₹10க்கு கொள்முதல் செய்கின்றனர். இதனால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்து உள்ளனர்.