வேலூர்: ஈரோட்டில் இருந்து வேலூருக்கு பாதயாத்திரையாக வந்த காந்திய இயக்க தம்பதியினர் நேற்று பாதயாத்திரையாகவே விஜயவாடாவுக்கு புறப்பட்டனர். மதுரை மாவட்டம் டி.வாடிப்பட்டி அருகே உள்ள டி.ஆண்டிப்பட்டி பங்களாவாழ் கிராமத்தை சேர்ந்தவர் கருப்பையா. அகில இந்திய காந்திய இயக்கத்தின் தேசிய ஒருங்கிணைப்பு செயலாளராக உள்ளார். இவரது மனைவி சித்ரா, தேசிய ஒருங்கிணைப்பு மகளிர் பிரிவு செயலாளராக உள்ளார்.
இந்நிலையில், வரும் மார்ச் 12ம் தேதி வரவுள்ள 90வது உப்பு சத்தியாக்கிரகத்தினை முன்னிட்டு கடந்த ஜனவரி 26ம் தேதி குடியரசு தினத்தன்று ஈரோடு மாவட்டம், கவுந்தப்பட்டி அருகே உள்ள செந்தாம்பாளையம் கிராமத்தில் காந்திஜி- கஸ்தூரிபாய்ஜி கோயிலில் இருந்து பாதயாத்திரை தொடங்கினர்.
தொடர்ந்து தம்பதியினர் பாதயாத்திரையாக, கடந்த 10ம் தேதி வேலூர் வந்தடைந்தனர். அப்போது, அவர்களுக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. தொடர்ந்து நேற்று காலை விஜயவாடாவுக்கு புறப்பட்டு சென்றனர். தொடர்ந்து ஐதராபாத்தில் வரும் மார்ச் 12ம் தேதி பாதயாத்திரையை நிறைவு செய்ய உள்ளதாக தெரிவித்துள்ளனர்.