×

உறவினர்கள் 20 பேரால் கடந்த ஓராண்டாக பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான சிறுமி பரிதாப பலி

* கே.கே. நகரில் பரபரப்பு
* போலீசார் தீவிர விசாரணை

சென்னை: பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான 7 வயது சிறுமி, தனது தாய் வீட்டிற்கு மருத்துவ சிகிச்சைக்கு வந்தபோது திடீரென உயிரிழந்தார். இந்த சம்பவம் கே.ேக.நகரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அடுத்த பிரம்மதேசத்தை சேர்ந்தவர் ராணி (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவருக்கு 10 மற்றும் 7 வயதில் இரண்டு மகள்கள். கருத்து வேறுபாடு காரணமாக ராணி தனது கணவரை கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு பிரிந்து, தனியாக தாய் வீட்டில் இரண்டு மகள்களுடன் வசித்து வந்தார். இரண்டு மகள்களும் சொந்த கிராமத்திலேயே படித்து வந்தனர். இதற்கிடையே புதுச்சேரியில் உள்ள துணிக்கடையில் ராணி வேலைக்கு சென்றபோது அங்கு உடன் பணியாற்றிய வாலிபர் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டு, அவரை இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். பின்னர் ராணி தனது இரண்டு மகள்களையும் தாய் வீட்டிலேயே விட்டுவிட்டு, தனது இரண்டாவது கணவனுடன் சென்னை சாலிகிராமம் விஜயராகவபுரம் 4வது தெருவில் வசித்து வருகிறார். இரண்டாவது கணவருக்கு ஆண் குழந்தை ஒன்று உள்ளது.

இந்நிலையில், பாட்டி வீட்டில் வசித்து வந்த ராணியின் இரண்டு மகள்களையும், உறவினர்கள் சிலர் மிரட்டி கடந்த ஓராண்டாக பாலியல் பலாத்காரம் செய்து வந்துள்ளனர். இதுகுறித்து வெளியில் சொன்னால் இருவரையும் கொலை செய்துவிடுவேன் என்று மிரட்டியும் வந்துள்ளனர்.  இதற்கிடையே மகள்களை பார்க்க ராணி ஊருக்கு சென்றுள்ளார். அப்போது உறவினர்கள் சிலரால், பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டது குறித்து இரண்டு மகள்களும் ராணியிடம் கூறி அழுதுள்ளனர். அதை கேட்டு அதிர்ச்சியடைந்த ராணி, இரண்டு மகள்களையும் புதுச்சேரிக்கு அழைத்து சென்று அங்குள்ள பள்ளியில் சேர்த்து படிக்க வைத்துள்ளார். அங்கு, பள்ளி சென்ற மூத்த மகள் உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்ததை பார்த்த பள்ளி ஆசிரியை ஒருவர் மாணவியிடம் விசாரணை நடத்தினார். அப்போது, மாணவி நடந்த சம்பவங்களை கூறி அழுதுள்ளார். அதை கேட்ட பள்ளி ஆசிரியை உடனே சைல்டு லைனில் புகார் அளித்தார். அதன்படி, சைல்டு லைன் அதிகாரிகள் மற்றும் குழந்தைகள் நலக் குழுவினர் விசாரணை நடத்தினர். பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்ட 2 சிறுமிகளையும் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக  அனுமதித்தனர்.

பின்னர் சம்பவம் குறித்து சைல்டு லைன் அதிகாரிகள் பிரம்மதேசம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். அப்போது, ராணியின் இரண்டு மகள்களையும் 20க்கும் மேற்பட்டோர் தொடர்ந்து பாலியல் பலாத்காரம் செய்தது தெரியவந்தது. அதைதொடர்ந்து சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்த 20க்கும் மேற்பட்டோர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து 16 பேரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். இந்த வழக்கு தற்போது நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இந்நிலையில் உடல் ரீதியாக பாதிக்கப்பட்ட இரண்டாவது மகளான 7 வயது சிறுமியை மட்டும் ராணி சென்னைக்கு அழைத்து வந்து சிகிச்சை அளித்து வந்தார். நேற்று முன்தினம் இரவு கடுமையாக வயிறு வலிப்பதாக கூறி கழிவறைக்கு சென்ற சிறுமி, வெகு நேரமாகியும் வெளியே வராததால், சந்தேகமடைந்த ராணி கழிவறைக்கு சென்று பார்த்தபோது, மகள் மயங்கி விழுந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

உடனடியாக மகளை மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். அங்கு சிறுமியை ஆய்வு செய்த டாக்டர்கள், சிறுமி இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து கே.ேக.நகர் காவல் நிலையத்தில் ராணி புகார் அளித்தார். அதன்படி போலீசார் வழக்கு பதிவு செய்து சிறுமி இறப்பு குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். தனது மகளை பலர் பாலியல் பலாத்காரம் செய்ததால் தான், உடல் ரீதியாக கடுமையாக பாதிக்கப்பட்டு  உயிரிழந்தாள் என்று, சிறுமியின் தாய் ராணி குற்றம்சாட்டியுள்ளார்.


Tags : relatives , A little girl, sexually harassed ,20 relatives
× RELATED குடும்பத்துடன் சுற்றுலா சென்றபோது...