×

சந்திரபாபு நாயுடு தனி செயலாளர் வீடு, அலுவலகங்களில் ஐடி சோதனை

* 2 ஆயிரம் கோடி வரி ஏய்ப்பு கண்டுபிடிப்பு
* 21 வங்கி லாக்கர்கள் முடக்கம்

திருமலை: முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் தனி செயலாளர் வீடு மற்றும் அலுவலகங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை செய்ததில் 2 ஆயிரம் கோடி வரி ஏய்ப்பு செய்திருப்பது தெரியவந்தது. மேலும், 21 வங்கி லாக்கர்கள் முடக்கப்பட்டுள்ளது. ஆந்திர மாநில முதல்வராக சந்திரபாபு இருந்தபோது அவருக்கு  தனிச் செயலாளராக நிவாஸ் பணிபுரிந்து வந்தார். இந்நிலையில், கடந்த 6ம் தேதி முதல் தொடர்ந்து 6 நாட்கள் ஸ்ரீநிவாஸ் விஜயவாடா வீடு மற்றும் ஆந்திரா, தெலங்கானா மாநிலங்களில் செயல்படும் 3 பிரபல கட்டுமான நிறுவனங்களின் ஹைதராபாத், கடப்பா, விசாகப்பட்டினம், டெல்லி, பூனா ஆகிய நகரங்களில் உள்ள அலுவலகங்கள் ஆகியவற்றில் ஒரே நேரத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர்.

இதையடுத்து, வருமான வரித்துறை அதிகாரிகள் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: ஒரு முக்கிய பிரமுகரின் முன்னாள் தனிச் செயலாளர் ஸ்ரீநிவாஸ் வீடு மற்றும் ஆந்திரா, தெலங்கானா ஆகிய மாநிலங்களில் செயல்படும் மூன்று முக்கிய கட்டுமான நிறுவனங்கள், பல்வேறு  நகரங்களில் உள்ள அலுவலகங்கள் ஆகியவற்றில் நடத்திய சோதனையில் சுமார் ₹2 ஆயிரம் கோடி அளவிற்கு வரி ஏய்ப்பு செய்திருப்பது தெரியவந்தது. மேலும், அந்த கட்டுமான நிறுவனங்கள், சப்-கான்ட்ராக்டர்கள் என்ற பெயரில் போலி கான்ட்ராக்டர்களுக்கு பணிகளை ஒதுக்கீடு செய்தது போல் ஆவணங்களை தயார் செய்தும், முறையான வகையில் கணக்கு வழக்குகளை பராமரிக்காமலும் இருந்தது தெரிந்தது.

மேலும், போலி சப்-கான்ட்ரக்டர்களை முக்கிய கட்டுமான நிறுவனங்களும் நேரடியாக இயக்கியது. அந்த நிறுவனங்களின் ஐபி அட்ரஸ், இ-மெயில் தகவல்கள், வாட்ஸ் அப் தகவல்கள் ஆகியவற்றின் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்த சோதனையில் 85 லட்சம் ரொக்கப் பணம், 71 லட்சம் மதிப்புள்ள தங்க ஆபரணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. மேலும், 25 வங்கி லாக்கர்கள் முடக்கப்பட்டுள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



Tags : solicitors ,Chandrababu Naidu ,offices ,ID , Chandrababu Naidu, Secretary's House, Offices, IT ride
× RELATED ஆந்திர தேர்தலில் 4 தொகுதியில் தெ.தே....