லண்டன்: இந்தியாவிற்கு நாடு கடத்தும் வழக்கை எதிர்த்து தொழிலதிபர் விஜய் மல்லையா தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கின் இறுதி வாதங்கள் முடிந்த நிலையில், தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. தொழிலதிபர் விஜய் மல்லையா ₹9 ஆயிரம் கோடி வங்கி கடன் பெற்று மோசடி செய்ததாக சிபிஐ., அமலாக்கத் துறை வழக்கு பதிவு செய்துள்ளன. இந்த விசாரணை தொடங்கிய நிலையில் அவர் வெளிநாடு தப்பிச் சென்றார். தற்போது, லண்டனில் வசித்து வரும் அவரை நாடு கடத்துவதற்கு லண்டன் நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்த வழக்கில் அவர் ஜாமீன் பெற்றதோடு, நாடு கடத்தும் தீர்ப்பை எதிர்த்து லண்டன் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடும் செய்தார். கடந்த 3 நாட்களாக நடந்த இந்த வழக்கின் இறுதி வாதம் நேற்று முடிந்தது. இதைத் தொடர்ந்து, வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி ஸ்டீபன் இர்வின், நீதிபதி எலிசபெத் லயிங் அமர்வு, ‘சிக்கலான இந்த வழக்கின் தீர்ப்பு வேறொரு நாளில் அறிவிக்கப்படும்,’ என அறிவித்தது. இந்த விசாரணைக்கு மல்லையா ஆஜராக தேவையில்லை என்று நீதிமன்றம் கூறியிருந்தபோதும், அவர் 3 நாட்களும் நீதிமன்றத்துக்கு வந்து விசாரணையை பார்த்தார்.