சென்னை: நாகப்பட்டினம் கடற்கரையிலிருந்து இலங்கைக்கு படகில் கஞ்சா கடத்தப்பட உள்ளதாக, சென்னை மண்டல போதைப்பொருள் தடுப்பு பிரிவுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில், நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் அருகே உள்ள ஆயக்காரன்புலம் என்ற கிராமத்தில் நேற்று முன்தினம் இரவு போலீசார் சோதனை செய்தனர். அப்போது அங்கு வந்த கன்டெய்னர் லாரியை சந்தேகத்தின் பேரில் சோதனை செய்தனர். அதில் பழுப்பு நிற டேப் சுற்றப்பட்ட 310 பாக்கெட்களில் கஞ்சா இருந்தது கண்டறியப்பட்டது. வண்டியின் பதிவு எண்ணை ஆய்வு செய்தபோது, ஆந்திர பதிவு எண் கொண்ட வண்டிக்கு, தமிழக பதிவு எண்ணை ஒட்டி, பயன்படுத்தியது தெரிந்தது.
இதுதொடர்பாக வண்டியில் இருந்த சென்னை திருவொற்றியூரை சேர்ந்த ரமணன் (39), தவமணி (34), நாகப்பட்டினம் மாவட்டத்தை சேர்ந்த ஐயப்பன் (35), பரமானந்தம் (43) ஆகியோரை கைது செய்தனர். முதல்கட்ட விசாரணையில் ஆந்திர மாநிலம் அனகாபல்லியில் இருந்து கஞ்சா எடுத்து வரப்பட்டு, நாகப்பட்டினத்தில் இருந்து இலங்கைக்கு கடத்த முயன்றது தெரியவந்தது. பறிமுதல் செய்பபட்ட 310 பொட்டலங்களில் இருந்த கஞ்சாவின் எடை 661.50 கிலோ. இதில் தொடர்புடைய நபர்கள் குறித்து தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.