சென்னை: ஒரே தொழில்நுட்ப கல்வி நிறுவனத்தில் எம்பிஏ, முதுநிலை நிர்வாகவியல் டிப்ளமோ படிப்பை நடத்தக்கூடாது என்று ஏஐசிடிஇ உத்தரவிட்டுள்ளது. ஏஐசிடிஇ செயலாளர் ராஜிவ் குமார் துணை வேந்தர்களுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியுள்ளதாவது:ஐஐஎம்களில் நடத்தப்படுவது போல் தனியார் நிறுவனங்கள் முதுநிலை நிர்வாகவியல் டிப்ளமோ படிப்புகளை நடத்த ஏஐசிடிஇ அனுமதி அளித்தது. நாளடைவில் மத்திய/ மாநில பல்கலைக்கழகங்கள், தனியார் நிகர்நிலை பல்கலைக்கழகங்கள் நிர்வாகவியல் பாடப்பிரிவுகள் என்ற பிரிவின்கீழ் முதுநிலை நிர்வாகவியல் டிப்ளமோவை நடத்த தொடங்கின.
இது ஏஐடிசிஇயின் அங்கீகார விண்ணப்பித்தல் கையேடு விதிகள் 2020-21க்கு முரணானது. ஏஐசிடிஇ அங்கீகாரம் விண்ணப்பித்தல் கையேடு 2020-21ன் பாரா 2.18ன்படி ஒரு கல்வி நிறுவனம் முதுநிலை நிர்வாகவியல் டிப்ளமோ, எம்பிஏ ஆகியவற்றை ஒரே நேரத்தில் நடத்த முடியாது. அதனால் மத்திய/ மாநில பல்கலைக்கழகங்கள், தனியார் நிகர்நிலை பல்கலைக்கழகங்கள் தங்கள் கல்வி நிறுவனத்தில் உள்ள முதுநிலை நிர்வாகவியல் டிப்ளமோ படிப்பை எம்பிஏவாக மாற்ற வேண்டும். பல்கலைக்கழகங்களுடன் இணைவு பெற்று செயல்படும் கல்வி நிறுவனங்கள் முதுநிலை நிர்வாகவியல் டிப்ளமோ படிப்புகளை எம்பிஏ பாடப்பிரிவாக மாற்ற வேண்டும். முதுநிலை நிர்வாகவியல் டிப்ளமோ படிப்பை நடத்த விரும்பும் கல்வி நிறுவனங்கள் தனியாக ஒரு தனியார் நிறுவனத்தின் பெயரில் முதுநிலை நிர்வாகவியல் டிப்ளமோ படிப்பை நடத்தலாம். இரு படிப்புகளையும் ஒரே வளாகத்தில் நடத்தக்கூடாது.