×

திருமண நிகழ்ச்சிக்கு வரும் விருந்தினர்களுக்கு தோட்டக்கலை செடிகள் குறைந்த விலையில் விநியோகம்: தமிழக அரசு அறிவிப்பு

சென்னை: தமிழக அரசு நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை:
விழாக்கள், பண்டிகைகள் மற்றும் திருமண நிகழ்ச்சிகளுக்கு வரும் விருந்தினர்களுக்கு மரக்கன்றுகள், காய்கறி நாற்றுகள் மற்றும் பழச்செடிகள் தரும் பண்பாட்டை ஊக்குவிக்கும் விதமாக நடப்பாண்டில், தமிழ்நாடு தோட்டக்கலை துறை விழாக்கள், பண்டிகைகள் மற்றும் திருமண நிகழ்ச்சிகளுக்கு தோட்டக்கலை சார்ந்த தரமான நடவுச்செடிகள்/பழச்செடிகளை குறைந்த விலையில் வழங்கி வருகிறது. இந்த பண்ணைகளில் நெல்லி, சப்போட்டா, மாதுளை, புளி, எலுமிச்சை, நாவல் மற்றும் விளாம்பழம் போன்ற நமது பாரம்பரிய பழக்கன்றுகளும், கருவேப்பிலை, கொடுக்காப்புளி, முந்திரி, வேம்பு, மலைவேம்பு, புங்கம், தேக்கு மற்றும் சவுக்கு போன்ற மரங்களும், மல்லிகை, வெட்சி மற்றும் அரளி போன்ற பூச்செடிகளும் உற்பத்தி செய்யப்பட்டு வழங்கப்பட்டு வருகின்றன. அரசு தோட்டக்கலை பண்ணைகளில் அழகுச்செடிகள் ரூ.5 முதல் ரூ.10 வரையிலும், வேம்பு, புங்கம் போன்ற மரச்செடிகள் ரூ.10 முதல் ரூ.20 வரையிலும், பழச்செடிகள் ரூ.8 முதல் ரூ.60 வரையிலும், மலர்ச்செடிகள் ரூ.8 முதல் ரூ.30 வரையிலும் விற்கப்படுகின்றன. இ-தோட்டம் செயலி (http://tnhorticulture.tn.gov.in/horti) வாயிலாகவும் பண்ணைகளில் முன்பதிவு செய்யலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Tags : Horticulture plants ,guests ,government ,Tamil Nadu , Wedding ceremony, guest, horticultural plants, low prices, distribution, government of tamil
× RELATED ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் கம்பி...