×

சொத்துவரி மாற்றுவதில் அக்கறையில்லை மேயர் பதவிக்கு மட்டும் கட்சியினர் ஆர்வம்: சென்னை உயர் நீதிமன்றம் கருத்து

சென்னை: சென்னை மாநகராட்சியில், சொத்து வரியை மாற்றியமைக்க ஆர்வம் காட்டாத அரசியல் கட்சியினர்,  மேயர் பதவியை பிடிப்பதற்கு மட்டுமே ஆர்வம் காட்டுவதாக சென்னை உயர் நீதிமன்றம் அதிருப்தி  தெரிவித்துள்ளது. சென்னை மாநகராட்சியில், சொத்து வரி வசூல் செய்ய விதிகளை வகுக்கும்படி மாநகராட்சிக்கும், அரசுக்கும் உத்தரவிட வேண்டும் எனக்கோரி வக்கீல் வி.பி.ஆர்.மேனன்  சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் கிருபாகரன், வேல்முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வு, கடந்த 2018ம் ஆண்டு உயர் நீதிமன்ற உத்தரவின்படி உயர்த்தப்பட்ட சொத்து வரியை அமல்படுத்தாமல் நிறுத்தி வைக்க முடிவெடுத்தது ஏன் என்பன உள்ளிட்ட பல்வேறு கேள்விகளை எழுப்பி அவற்றுக்கு சென்னை மாநகராட்சி ஆணையர், மற்றும் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை செயலாளர் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்குமாறு நேற்று முன்தினம் உத்தரவிட்டனர்.

இந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, கூடுதல் அட்வகேட் ஜெனரல் அரவிந்த் பாண்டியன் ஆஜராகி, அரசின் அவசர பணியாக மாநகராட்சி ஆணையர் டெல்லி செல்வதால் அவர் நேரில் ஆஜராக முடியவில்லை. அவர் ஆஜராக அவகாசம் வழங்க வேண்டும் என்று கோரினார். இதையடுத்து, நீதிபதிகள், சொத்துவரியை உயர்த்தாமல் கடந்த 20 ஆண்டுகளாக அரசு தூங்கி கொண்டிருக்கிறது. 20 ஆண்டுகளில் 4 முறை வரியை உயர்த்தி இருக்க வேண்டும். சொத்துவரியை உயர்த்த ஆர்வம் காட்டாமல் மேயர் பதவியை பிடிப்பதில்  மட்டுமே அரசியல் கட்சியினர் ஆர்வம் காட்டுகிறார்கள். மாநகராட்சி பகுதியில் இல்லாதவர்கள் தான் அதிகமாக சொத்து வரி செலுத்துகிறார்கள். சொத்து வரி உயர்த்தாததால் தான், வெளியூரைச் சேர்ந்தவர்கள் சென்னையில் முதலீடுகள் செய்ய ஆர்வம் காட்டுகிறார்கள். சொத்துவரி உயர்த்தாதது குறித்து சென்னை மாநகராட்சி ஆணையர், மற்றும் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை செயலாளர் ஆகியோர் வரும் 18ம் தேதி நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டனர்.

Tags : Mayors ,Madras High Court ,parties , Property, Transfer, Concern, Mayor, Party Interest, Madras High Court, Opinion
× RELATED விவிபேட் சீட்டு வழக்கு: விசாரணைக்கு ஏற்க சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு