சென்னை: மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றின் அடிப்படையில் கங்கனா ரனாவத் நடிக்கும் தலைவி என்ற தமிழ் படத்தை இயக்குனர் ஏ.எல்.விஜய்யும், ரம்யா கிருஷ்ணன் நடிக்கும் “குயின்” என்ற இணையதள தமிழ் தொடரை இயக்குனர் கவுதம் வாசுதேவ மேனனும் இயக்கி வருகின்றார். இந்நிலையில் தன் அனுமதியில்லாமல் தலைவி, ஜெயா, குயின் எடுக்கப்படும் படங்கள், இணையதள தொடருக்கு தடை விதிக்க கோரி ஜெயலலிதாவின் அண்ணன் ஜெயகுமாரின் மகளான ஜெ.தீபா உரிமையியல் வழக்கு செய்திருந்தார். இந்த வழக்கை தனி நீதிபதி தள்ளுபடி செய்தார். இதையடுத்து, தீபா தரப்பில் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
அந்த மனுவில், ஜெயலலிதாவின் கண்ணியத்திற்கும், தனது வாழ்க்கைக்கும் பாதிப்பில்லாமல் இந்த திரைக்கதைகள் எழுதப்பட்டிருக்கின்றனவா என்பதை சரிபார்க்க வேண்டிய அவசியம் இருப்பதாக குறிப்பிட்டுள்ளார். இந்த மேல்முறையீட்டு மனு, நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், கிருஷ்ணன் ராமசாமி ஆகியோர் அடங்கிய அமர்வு முன் நேற்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, இந்த மனு தொடர்பாக இயக்குனர் ஏ.எல்.விஜய், விஷ்ணுவர்தன் இந்தூரி மற்றும் கவுதம் வாசுதேவ் மேனன் ஆகியோர் 2 வாரத்திற்குள் பதிலளிக்குமாறு உத்தரவிட்டனர்.