சென்னை: சென்னையில் இன்று முதல் பிப். 28 வரை போராட்டம், ஆர்பாட்டம், மனிதச்சங்கிலி, பொதுக்கூட்டம் நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெற கோரி மத்திய அரசை கண்டித்து இஸ்லாமிய அமைப்புகள், அரசியல் கட்சிகள், இளைஞர்கள், கல்லூரி மாணவர்கள் என பல தரப்பினரும் போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்களை நடத்தி வருகின்றனர். அந்தவகையில் தமிழகத்திலும் இஸ்லாமிய அமைப்புகள் மற்றும் பல்வேறு அமைப்புகள் சார்பில் தொடர் போராட்டம், பொதுக்கூட்டங்கள் மற்றும் பேரணி நடந்து வருகிறது. திமுக தலைமையில் ஒருங்கிணைந்த கட்சிகள் பேரணி நடத்தியதோடு அடுத்ததாக கையெழுத்து இயக்கத்தையும் நடத்தி வருகின்றனர்.
இதை கட்டுப்படுத்தும் வகையில் சென்னை மாநகர காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த ஜனவரி மாதம் 28-ம் தேதி மாலை 6 மணி முதல் வரும் பிப்ரவரி நேற்று 12ம் தேதி 6 மணி வரை சென்னையில் காவல் துறையால் அனுமதிக்கப்பட்ட இடங்கள் உட்பட எந்த இடங்களிலும் தமிழ்நாடு சிட்டி போலீஸ் ஆக்ட் 41ன்படி பேரணி, பொதுக்கூட்டம், மனித சங்கிலி, போராட்டம், சாலை மறியல் போராட்டங்கள் நடத்த போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் தடை விதித்திருந்தார்.
அப்படி தவிர்க்க முடியாத நிலையில் நிகழ்ச்சிகள் யாரேனும் நடத்த வேண்டும் என்றால் நிகழ்ச்சி நடப்பதற்கு 5 நாட்களுக்கு முன்பு காவல் துறையில் கடிதம் வழங்க வேண்டும். இந்த உத்தரவை மீறி யாரேனும் போராட்டம், பேரணி, பொதுக்கூட்டங்கள் நடத்தினால் அவர்கள் மீது சிட்டி போலீஸ் ஆக்ட் 41ன்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்திருந்தார்.
இந்த கட்டுப்பாடுகள் நேற்றுடன் முடிவடைந்த நிலையில், சென்னை பெருநகர காவல் எல்லைக்குட்பட்ட பொது இடங்கள், போக்குவரத்து பகுதிகளில் பொதுக்கூட்டங்கள், பேரணி, கண்டன ஆர்ப்பாட்டம் மற்றும் மனித சங்கிலி போன்ற போராட்டங்கள் நடத்த இன்று முதல் பிப்ரவரி 28-ம் தேதி வரை தடைவிதித்து சென்னை காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் உத்தரவிட்டுள்ளார். காவல் ஆணையரின் இந்த உத்தரவு அரசியல் கட்சியினர் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக வழக்கு தொடர உள்ளதாகவும் தகவல் தெரிவிக்கப்படுகிறது.