தக்கலை: குமரி மாவட்டத்தில் தேசிய நெடுஞ்சாலைகளை சீரமைக்க கோரி மனோதங்கராஜ் எம்எல்ஏ 18 கிலோ மீட்டர் நடந்து சென்று கலெக்டரிடம் மனு அளித்தார். குமரி மாவட்டத்தில் தேசிய ெநடுஞ்சாலைகள் பல இடங்களில் சேதமாகி உள்ளன. குண்டும் குழியுமாக போக்குவரத்துக்கு லாயக்கற்ற நிலையில் காணப்படுகின்றன. இதனால் தினமும் விபத்துகள் ஏற்பட்டு உயிர் இழப்பு, பொருள்கள் சேதமும் ஏற்பட்டு வருகிறது. எனவே தேசிய நெடுஞ்சாலைகளை செப்பனிட வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்த நிலையில் குமரி மேற்கு மாவட்ட திமுக செயலாளர் மனோதங்கராஜ் எம்எல்ஏ ேதசிய நெடுஞ்சாலைகளை செப்பனிட கோரி கலெக்டரிடம் மனு அளிக்க 18 கிலோ மீட்டர் நடைபயணம் செய்ய முடிவு செய்தார். அதன்படி இன்று காலை சுமார் 8 மணியளவில் தக்கலையில் இருந்து நடைபயணத்தை தொடங்கினார். அவருடன் கட்சி நிர்வாகிகள் பலரும் வந்தனர். தொடர்ந்து நாகர்கோவில் ெசன்று கலெக்டரிடம் மனு அளித்தார்.
நடைபயணம் தொடங்கிய மனோதங்கராஜ் எம்எல்ஏ கூறியதாவது: கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து நெடுஞ்சாலைகளும் வாகனங்கள் பயணிக்க முடியாத அளவுக்கு மிகவும் மோசமான நிலையில் காணப்படுகின்றன. கடந்த ஆண்டு ெநடுஞ்சாலைகளில் 1421 விபத்துகள் நடந்துள்ளன. இதில் 211 பேர் மரணமடைந்துள்ளனர். ஏராளமானோர் படுகாயமடைந்துள்ளனர். இதுதொடர்பாக பலமுறை புகார் அளிக்கப்பட்டது. டெண்டர் போட்டும் சாலை சீரமைப்பு பணி தொடங்கவில்லை. குமரி மாவட்டத்தில் அரசு தூங்கிக்கொண்டிருக்கிறது. அரசு அலுவலகங்களில் ஊழல் நிறைந்துள்ளது. மரண குழிகளாக மாறிய சாலைகளை மக்கள் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. என்எச் 47 சாலைகள் குண்டும் குழியுமாக காணப்படுகிறது. இந்த சாலையை உடனடியாக செப்பனிட கோரி மனு அளிப்பதற்காக கலெக்டர் அலுவலகத்துக்கு நடைபயணமாக செல்கிறேன்.
இதன் பின்னரும் சாலைகள் செப்பனிடப்படவில்லை என்றால் பொது மக்களை திரட்டி முற்றுகை போராட்டம் நடத்தப்படும். இவ்வாறு அவர் கூறினார். எம்எல்ஏவுடன் பத்மநாபபுரம் நகர செயலாளர் மணி, திருவட்டார் ஒன்றிய செயலாளர் ஜாண்பிரைட், மாவட்ட பொருளாளர் மரியசிசுகுமார், பொறியாளர் அணி அமைப்பாளர் வர்க்கீஸ், பேரூர் செயலாளர்கள் செல்வகுமார், சோலைராஜன், சத்தியராஜ், மாணவர் அணி செயலாளர் ராஜேஷ், கண்ணனூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி தலைவர் ராஜேஷ் உள்பட பலர் கலந்துகொண்டனர்.