×

பழநி தைப்பூச திருவிழாவில் 4.5 லட்சம் பேருக்கு துணிப்பை : பிளாஸ்டிக் ஒழிப்பு முயற்சியில் நகராட்சி தீவிரம்

பழநி: பிளாஸ்டிக் பைகளை ஒழிக்கும் முயற்சியாக பழநி தைப்பூச திருவிழாவில் கோயிலுக்கு வந்த சுமார் 4.5 லட்சம் பக்தர்களுக்கு நகராட்சி நிர்வாகம் சார்பில் துணிப்பைகள் வழங்கப்பட்டுள்ளது.அறுபடை வீடுகளில் 3ம் படை வீடாக விளங்குவது பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயில். இங்கு நாள்தோறும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்வர். திருவிழா காலங்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் வருவர். பழநி நகரம் பிளாஸ்டிக் இல்லா நகராக அறிவிக்கப்பட்டுள்ளது. நகரில் உள்ள கடைகளில் பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக பைகளை அவ்வப்போது அதிகாரிகள் ஆய்வு செய்து பறிமுதல் செய்வது வழக்கம். இந்நிலையில் பழநி கோயிலில் நடைபெறும் முக்கிய திருவிழாக்களில் ஒன்றாக தைப்பூசம் 10 நாட்களாக நடந்தது. இவ்விழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருக்கல்யாணம், தேரோட்ட நிகழ்ச்சிகளில் 6 லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

இவ்விழா நடைபெற்ற நாட்களில் பக்தர்கள் பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்துவதை தவிர்க்கும் வகையில் நகராட்சி நிர்வாகம் சார்பில் துணிப்பைகள் வழங்கப்பட்டன. நகராட்சி ஆணையர் லட்சுமணன் உத்தரவின் பேரில், நகர்நல அலுவலர் (பொ) வேல்முருகன் தலைமையிலான அதிகாரிகள் பக்தர்களுக்கு துணிப்பைகளை வழங்கினர். தொண்டு நிறுவனங்கள் உதவியுடன் பக்தர்களுக்கு 2 நாட்களில் சுமார் 4.5 லட்சம் துணிப்பைகளை வழங்கப்பட்டன. பக்தர்கள் கொண்டு வந்திருந்த பிளாஸ்டிக் பைகளை பெற்று கொண்டும் துணிப்பைகள் வழங்கப்பட்டன. நகராட்சி நிர்வாகத்தின் இந்நடவடிக்கை பக்தர்கள், பொதுமக்கள் மத்தியில் பலத்த வரவேற்பை பெற்றுள்ளது.

Tags : festival , dressed ,Pazhani Thaipuja , plastic ,eradication
× RELATED ஹாங்காங்கில் பன் திருவிழா கொண்டாட்டம்..!!