டெல்லி: துபாயில் இருந்து டெல்லிக்கு வந்த விமானத்தில் வேர்க்கடலை, பிஸ்கட், இறைச்சிக்குள் மறைத்து வெளிநாட்டு பணம் கடத்திய வாலிபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் அவர் கடத்தி வந்த ரூ.45 லட்சத்தை போலீசார் பறிமுதல் செய்தனர். டெல்லியில் உள்ள இந்திராகாந்தி சர்வதேச விமான நிலையத்தில், வெளிநாட்டில் இருந்து வந்த பயணிகளிடம் மத்திய தொழிற்பாதுகாப்பு படையினர் சோதனை மேற்கொண்டனர்.
அப்போது வாலிபர் ஒருவரின் நடவடிக்கையில் அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்ட நிலையில் அவரை தனியாக அழைத்து சென்று அவரது உடை, அவர் கொண்டு வந்த பொருட்கள் அனைத்தையும் சோதனை செய்தனர். இதையடுத்து அவர் கொண்டு வந்த உணவு பையை திறந்து பார்த்தனர். அதில் வேர்க்கடலை, பிஸ்கட் பாக்கெட்டுகள் மற்றும் சமைத்த இறைச்சி ஆகியவை மட்டுமே இருந்தன.
அதன் மீது சந்தேகம் ஏற்பட்டதால் அதில் இருந்த வேர்க்கடலை ஒன்றை உடைத்து பார்த்தபோது அதில் மடக்கி சுருட்டப்பட்டு கட்டப்பட்டிருந்த வெளிநாட்டுப் பணம் இருந்தது. அதிர்ச்சியடைந்த அதிகாரிகள், அதில இருந்த வேர்க்கடலைகளை அனைத்தையும் உடைத்தனர். அதில் வெளிநாட்டு பணத்தை மறைத்து கடத்தியது தெரிய வந்தது. அந்த வாலிபர் கொண்டு வந்த பிஸ்கட் பாக்கெட்டுகளில் பிஸ்கட்டின் நடுவில் துளையிட்டு அதில் முன்னும், பின்னும் சில பிஸ்கட்டுகள் வைத்து மறைக்கப்பட்டு இருந்தது. இதனையடுத்து அந்த வாலிபரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.