×

பாண்டியர் ஆட்சிகாலத்தை விளக்கும் பாடல் கல்வெட்டு விருதுநகர் மாவட்ட எல்லையில் கண்டுபிடிப்பு

மதுரை: விருதுநகர் மாவட்ட எல்லையில் மிக முக்கியத்துவம் வாய்ந்த, கி.பி. 1217ம் ஆண்டை சேர்ந்த குலசேகரபாண்டியனின் ‘பாடல் கல்வெட்டு’ கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மதுரையில் அரசு அருங்காட்சியக காப்பாட்சியர் மருதுபாண்டியன் நிருபர்களிடம் நேற்று கூறியதாவது: மதுரைக்கு 25 கிமீ தொலைவில் விருதுநகர் மாவட்டம், கல்குறிச்சி அருகே உள்ளது கணக்கனேந்தல் கிராமம். தமிழ்நாடு திறந்தவெளி பல்கலைக்கழக சமூகவியல் துறை பேராசிரியர் திருமால் ராஜா, அவரது குழுவினர் மணிகண்டன், நாகராஜன், ஆதிதேவன் ஆகியோர் வழங்கிய தகவலின்படி, நான் மற்றும் பாண்டிய நாட்டு வரலாற்று ஆய்வு மைய மூத்த ஆய்வாளர் உதயகுமாரும் அங்கு சென்று படி எடுத்து அங்குள்ள கல்வெட்டை வாசித்தோம். இக்கல்வெட்டு மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கிறது. முதலாவதாக இந்த கல்வெட்டு அழகிய தமிழ் பாடல் வடிவில், அதாவது, ‘அன்ன மென்னு நடை’ எனும் தொடருடன் தொடங்குகிறது.

புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதியில் உள்ள முதலாம் மாறவர்மன் கல்வெட்டில் காணப்படும் அதே தொடரை, இது ஒத்திருக்கிறது. இக்கல்வெட்டில் சகர ஆண்டு 1139 என குறிப்பிடப்பட்டுள்ளது. அவ்வாறெனில் கிறிஸ்தவ ஆண்டு 1217 ஆகும்.‌ எனவே இக்கல்வெட்டு முதலாம் மாறவர்மன் சுந்தரபாண்டியனின் இரண்டாம் ஆட்சி ஆண்டைச் சேர்ந்ததாகும். (கிபி 1216-1238) எனக் கருதலாம். ஆனால் இக்கல்வெட்டு குலசேகரருக்கு 28வது ஆட்சியாண்டு எனக் குறிப்பிடுகிறது. குலசேகர பாண்டியன் முதலாம் சடையவர்மன் குலசேகரன் (கி.பி.1190-1216) ஆவார். இவரே மாறவர்மன் சுந்தரபாண்டியனின் மூத்த சகோதரர். வரலாற்று ஆசிரியர்கள் இவரது ஆட்சிக் காலத்தை கி.பி. 1216ல் முடிந்தது என்றும், கிபி 1216 லேயே சுந்தரபாண்டியன் ஆட்சி தொடங்கியது என்றும் கருதுகின்றனர். ஆனால் இக்கல்வெட்டு குலசேகர பாண்டியனின் ஆட்சி 28 ஆண்டுகள் நீடித்து உள்ளது என்பதைக் காட்டுகிறது.

எனவே குலசேகரனும், சுந்தரபாண்டியனும் உடன் ஆட்சியாளர்களாக கி.பி.1216 மற்றும் கி.பி.1217ம் ஆண்டுகளில் ஆட்சி செய்துள்ளனர் என்பதை இக்கல்வெட்டு உறுதிப்படுத்துகிறது. இந்த கல்வெட்டானது, கல்குறிச்சி ஊரில் உள்ள சிவன் கோயிலுக்கு, அவ்வூரில் குளத்தி வாய்க்கால் எனும் வயலின் செந்நெல் விளையும் நிலத்தை முத்தரையர் கொடையாக அளித்தார் எனும் செய்தியை குறிப்பிடுகிறது. கல்குறிச்சி ஊர் தற்போது வரை மதுரை - தூத்துக்குடி நெடுஞ்சாலையில் இருக்கிறது. இக்கல்வெட்டை வெட்டியவர் கல்குறிச்சியைச் சேர்ந்த கல் தச்சர் பூவன் இரட்டையான் என்ற சோழ கங்கதச்சன் ஆவார். இக்கல்வெட்டைப் படித்து பொருளறிய பாண்டிய நாட்டு வரலாற்று மைய செயலாளர் சாந்தலிங்கம் உதவினார். பிற்கால பாண்டியர்களின் ஆட்சி ஆண்டு குறித்தும், பாடல் வடிவிலமைந்த ஒன்றாகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இக்கல்வெட்டு இருக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.

Tags : district boundary ,Pandyan ,Virudhunagar , Pantier, Song Inscription, Virudhunagar, Invention
× RELATED சட்ட விரோதமாக பட்டாசு தயாரித்ததே...