கோவை: பா.ஜ.வுக்கும் நடிகர் விஜய்க்கும் இடையில் எந்த பகையும் இல்லை என பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார். பா.ஜ. மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான பொன்.ராதாகிருஷ்ணன், கோவையில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: ரஜினியுடன் கூட்டணியா? என்பதற்கு ராமதாஸ் இதுவரை எந்த மறுப்பும் தெரிவிக்கவில்லை. வருமான வரித்துறை ஒரு தன்னாட்சி பெற்ற அமைப்பு. இத்துறையினர், நடிகர் விஜய் வீட்டில் சோதனை நடத்தியதற்கும், பாரதிய ஜனதா கட்சிக்கும் எந்த தொடர்பும் இல்லை. நடிகர் விஜய்க்கும் பா.ஜ.விற்கும் இடையே எந்த பகையும் இல்லை. நெய்வேலி என்.எல்.சி. பாதுகாக்கப்பட்ட இடம். அங்கு விதிமுறைகளை மீறி யாரும் செல்லமுடியாது.
அப்படிப்பட்ட இடத்தில் சினிமா படப்பிடிப்புக்கு எப்படி அனுமதி அளித்தார்கள் என புரியவில்லை. பாதுகாக்கப்பட்ட இடத்தில் படப்பிடிப்பு நடத்தவேண்டாம் என்றுதான் பா.ஜ.வினர் எதிர்ப்பு தெரிவித்தனர். பாதுகாக்கப்பட்ட இடத்தில் படப்பிடிப்பு நடத்த அனுமதி அளித்து என்.எல்.சி. நிறுவனம் தவறு செய்துள்ளது. இது அந்த நிறுவனத்தின் தவறு, அரசின் தவறல்ல. தனிப்பட்ட முறையில் விஜய்யை நான் நேசிக்கிறேன். டெல்டா மாவட்டங்களை, பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக தமிழக அரசு அறிவித்துள்ளது வரவேற்கத்தக்கது. அப்பகுதியின் விவசாயம் செழிக்க தேவையான நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார்.