×

எம்எல்ஏ.வுடன் கோஷம் போட்டு சென்ற ஆம் ஆத்மி தொண்டர் சுட்டுக்கொலை: முன்விரோதத்தில் சுட்டவர் சிக்கினார்

புதுடெல்லி: டெல்லியில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட மெகரூலி தொகுதி ஆம் ஆத்மி கட்சி எம்எல்ஏ.வுடன் வெற்றிக் கொண்டாட்டத்தில் ஈடுபட்ட ஆம் ஆத்மி தொண்டர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டார். துப்பாக்கியால் சுட்ட நபரை போலீசார் நேற்று கைது செய்தனர். டெல்லி சட்டப்பேரவையின் வாக்கு எண்ணிக்கை நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில் ஆம் ஆத்மி கட்சி அமோக வெற்றி பெற்றது. அக்கட்சி வெற்றி பெற்ற தொகுதிகளில்  மெகரூலியும் ஒன்று. இந்த தொகுதியில் அக்கட்சியின் சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்றவர் நரேஷ் யாதவ். இவர் தனது வெற்றியை ஆதரவாளர்களுடன் கொண்டாடியவாறு  கோயிலுக்கு சென்று வழிபாடு நடத்தினார். பின்னர் தனது வீட்டுக்கு வாகனங்கள் புடைசூழ திரும்பிக்கொண்டிருந்தார்.

அப்போது, தென்மேற்கு டெல்லியின் கிஷான்கர்க் கிராமத்தை கடக்கையில் அடையாளம் தெரியாத நபர், எம்எல்ஏ காருக்கு பின்னால் வந்த காரின் மீது சரமாரியாக துப்பாக்கியால் சுட்டார். இதில், எம்எல்ஏவுடன் சென்ற ஆம் ஆத்மி தொண்டர் அசோக் மான் என்பவர் மீது குண்டு பாய்ந்து பரிதாபமாக உயிரிழந்தார். மற்றொரு தொண்டர் குண்டு காயத்துடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். எம்எல்ஏ நரேஷ் யாதவை சுட்டுக் கொல்ல நடந்த முயற்சி என்று பெரும் பரபரப்பு எழுந்தது. இந்நிலையில், இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்திய போலீசார் தர்மேந்தர் என்ற கல்லூவை (40) கைது செய்தனர்.

அவரிடம் நடத்திய விசாரணையில், சுட்டுக் கொல்லப்பட்ட அசோக் மானுக்கும், இவருக்கும் முன்பகை இருந்துள்ளது. கடந்த ஆண்டே இவர்கள் இருவரும் சரமாரியாக மோதியுள்ளனர். இந்நிலையில், அசோக் மானை கொல்வதற்கான சமயத்தை தர்மேந்தர் எதிர்பார்த்து காத்திருந்துள்ளார். அவர் எம்எல்ஏ நரேஷ் யாதவின் காருக்கு பின்னால் வருவதாக கிடைத்த செய்தியை தொடர்ந்து அங்கு சென்ற தர்மேந்தர் அவரை நோக்கி சரமாரியாக சுட்டுள்ளார். இதில் அவர் இறந்தார். இதையடுத்து, தர்மேந்தரை போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Tags : Aam Aadmi Party Volunteer Shootout With MLA , MLA, slogan, AAP volunteer, shot dead
× RELATED மணிப்பூரில் வாக்குச்சாவடியை சூறையாடிய வன்முறைக் கும்பல்!