திருவனந்தபுரம்: ‘கேரளாவில் கோடை தொடங்குவதற்கு முன்பே வெயில் சுட்டெரிக்க தொடங்கியதால் திறந்த வெளியில் வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு பகல் 12 முதல் 3 மணி வரை ஓய்வு கொடுக்க வேண்டும்,’ என்று கேரள தொழிலாளர் நலத்துறை உத்தரவிட்டுள்ளது. கேரளாவில் வழக்கமாக டிசம்பர், ஜனவரி மாதங்களில் கடும் குளிர் நிலவும். ஏப்ரல், மே மாதங்களில்தான் வெயில் அதிகமாக இருக்கும். ஆனால், இந்தாண்டு ஜனவரி முதல் வழக்கத்தை விட அதிகமாக வெயில் சுட்டெரித்து வருகிறது. பல்வேறு இடங்களில் இப்போதே 37 டிகிரிக்கும் மேல் வெயில் அடிக்கிறது.
நேற்று முன்தினம் கோட்டயத்தில் அதிகபட்சமாக 37.2 டிகிரி வெப்பம் பதிவானது. ஆலப்புழா மற்றும் புனலூரில் 36 டிகிரியை தாண்டியது. கேரளா முழுவதும் தற்போது கோடையை மிஞ்சும் அளவுக்கு வெப்பம் காணப்படுகிறது. எனவே, திறந்தவெளியில் வெயிலில் வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு பணி நேரத்தை மாற்றி அமைக்க கேரள தொழிலாளர் நலத்துறை உத்தரவிட்டுள்ளது. இதன்படி, பகல் 12 முதல் 3 மணி வரை தொழிலாளர்களுக்கு ஓய்வு கொடுக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த உத்தரவு ஏப்ரல் 30ம் தேதி வரை அமலில் இருக்கும்.