×

டெல்லியில் சரியான தலைவரை முன்னிறுத்த முடியாமல் போனதே காங்கிரஸ் தோல்விக்கு காரணம்: கபில் சிபல் கருத்து

புதுடெல்லி: டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலில் சரியான தலைவரை முன்னிறுத்த முடியாமல் போனதே காங்கிரஸ் தோல்விக்கு காரணம் என கபில் சிபல் கருத்து தெரிவித்துள்ளார். 70 உறுப்பினர்களை கொண்ட டெல்லி சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு, கடந்த 8ம் தேதி நடந்தது. இதன் வாக்கு எண்ணிக்கை நேற்று நடந்தது. இந்த தேர்தல் முடிவில் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சி 60க்கும் மேற்பட்ட தொகுதிகளில் முன்னிலை பெற்று வெற்றி பெற்றுள்ளது. டெல்லி சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்க 36 உறுப்பினர்கள் தேவை என்ற நிலையில், ஆம் ஆத்மி கட்சி 3வது முறையாக ஆட்சி அமைக்கிறது. பாஜக 8 இடங்களில் வென்றது.

ஆம் ஆத்மி கட்சிக்கு 53 சதவீத வாக்குகளும், பாஜகவுக்கு கடந்த தேர்தலைவிட 6 சதவீத வாக்குகள் அதிகமாக அதாவது 38 சதவீத வாக்குகளும் கிடைத்துள்ளன. கடந்த தேர்தலைப் போலவே இந்த தேர்தலிலும் காங்கிரஸ் ஒரு இடத்தில்கூட வெற்றி பெறவில்லை. மேலும் காங்கிரஸ் கட்சிக்கு 5 சதவீத வாக்குகளே கிடைத்துள்ளன. காங்கிரஸ் வேட்பாளர்களில் 63 பேர் டெபாசிட்டுகளை இழந்துள்ளனர். இதனால், காங்கிரஸ் கட்சியினர் பெரும் சோகத்தில் உள்ளனர். இந்த நிலையில், டெல்லியில் காங்கிரஸ் தோல்வி குறித்து அக்கட்சியின் மூத்த தலைவர் கபில் சிபல் கருத்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலில் சரியான தலைவரை முன்னிறுத்த முடியாமல் போனதே காங்கிரஸ் தோல்விக்கு காரணம்.

இது கட்சிக்குள் இருக்கும் பிரச்சினை. நாங்கள் அதைக் கவனித்து விரைவாக தீர்ப்போம். எதிர்காலத்தில் கட்சியை வளர்க்க தேவையான நடவடிக்கையை எடுப்போம். எனினும் டெல்லி தேர்தலில் மக்களை பிரித்தாளும் அரசியலை பாஜக செய்தது. ஆனால் அதற்கு மக்கள் சரியான பாடம் புகட்டி விட்டனர். ஜாதி ரீதியாகவும், மத ரீதியாகவும் மக்களை பிரிக்கும் வகையில் பேசுவதை மத்திய அமைச்சர்கள் இனிமேலாவது நிறுத்திக் கொள்ள வேண்டும். இதனை அமித் ஷாவும் உணர்ந்திருப்பார். பாஜகவின் தோல்வி இத்துடன் முடியப்போவதில்லை என தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் கூறியிருந்தார். அது மிகச்சரியானது, எனக் கூறியுள்ளார்.


Tags : Kapil Sibal ,Congress ,Delhi , Congress, Delhi, Assembly elections, defeat, Kapil Sibal
× RELATED மக்களவைத் தேர்தலுக்கான வாக்குறுதிகள்...