×

ஆவடி அருகே பணம் கொடுக்க மறுத்த பாட்டியை கொன்ற பேரன் மற்றும் அவரது கூட்டாளி கைது

ஆவடி: ஆவடி நகராட்சி அடுத்த கண்ணப்பாளையத்தில் ஒத்தவாடை தெருவை சேர்ந்தவர் மல்லிகா(56). இவர் தனது கணவரை இழந்து, அவரது ஓய்வூதிய பணத்தில் வாழ்க்கை நடத்தி வந்தார்.  இந்நிலையில், கடந்த 7-ஆம் தேதி இவர் வீட்டின் சமையலறையில் கொலை செய்யப்பட்டு சடலமாக கிடந்தார். இந்த சம்பவம் அறிந்து வந்த காவல்த்துறையினர், வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். விசாரணையில் மல்லிகாவுடைய  சகோதரியின் பேரனான கோகுல்(19) என்பவர் தான் கொலை செய்தது தெரியவந்தது.

இதனையடுத்து, கோகுல் மற்றும் அவரது கூட்டாளி அயனாவரத்தை சேர்ந்த 17வயது சிறுவனையும் போலீசார் கைது செய்தனர். அவர்கள் அளித்த வாக்குமூலத்தால் மல்லிகாவை ஏன் கொலை செய்தனர் என்பது குறித்த தகவல் தெரியவந்துள்ளது. இதுகுறித்து போலீசார் கூறுகையில், “கொலை செய்யப்பட்ட மல்லிகாவிற்கு பத்மா எனும் அக்கா இருக்கிறார். இவரது மகள் விஜயா கொளத்தூரில் வசித்து வருகிறார். இவரது கணவர் ரமேஷ் உடல்நலக்குறைவு காரணமாக காலமானதால் மகன் கோகுலுடன் வசித்து வந்தார். கூலி வேலை செய்து வந்த கோகுல் அடிக்கடி வந்து பாட்டி மல்லிகாவிடம் குடும்ப செலவுக்காக பணத்தை வாங்கி செல்வது வழக்கமாக இருந்து வந்துள்ளது.

இதைத்தொடர்ந்து வாடகை வீடு மாற வேண்டியுள்ளதால் பாட்டி மல்லிகாவிடம் பணம் வேண்டும் என கோகுல் கேட்டுள்ளார். அதற்கு அவர் பணம் இல்லை எனக்கூறியுள்ளார். இதனால், ஆத்திரமடைந்த கோகுல் தனது நண்பனுடன் சேர்ந்து கடந்த 6-ம் தேதி இரவு மல்லிகாவை கொலை செய்துள்ளார். மேலும், காது, மூக்கில் இருந்த நகைகள் மற்றும் வீட்டில் இருந்த நகைகள் ஆகியவற்றை திருடிச் சென்றுள்ளனர். அவர்களிடம் இருந்து 7 சவரன் தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.


Tags : Grandson ,partner ,Grandndson ,Avadi Avadi , Awadhi, who refused to pay, killed grandmother, grandson, partner, arrested
× RELATED நாமக்கல் அருகே பேரறிஞர் அண்ணா அரசு...