டெல்லி: வங்கிகளில் கோடிக்கணக்கில் கடன் வாங்கி மோசடி செய்து விட்டு வெளிநாடு தப்பிச் சென்ற மும்பை வைர வியாபாரி நீரவ் மோடி, தொழிலதிபர் விஜய் மல்லையா, மற்றும் கடனை செலுத்த மறுக்கும் அனில் அம்பானி ஆகியோரின் மதிப்பு மிகுந்த உடைமைகளை ஏலத்தில் விற்கும் நடவடிக்கைகள் துவங்க உள்ளன.
மும்பை வைர வியாபாரி நிரவ் மோடி, அவரது நெருங்கிய உறவினர் மெகுல் சோக்சி ஆகியோர் பஞ்சாப் நேஷனல் வங்கி மூலம் ரூ.13 ஆயிரம் கோடி சட்ட விரோத பணப் பரிமாற்ற மோசடியில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. நீரவ் மோடிக்கு சொந்தமான கைக்கடிகாரம், ரோல்ஸ் ராய்ஸ் கார் உள்ளிட்ட உடைமைகள் ஏலம் விடப்பட உள்ளதாக அமலாக்கத் துறை ஏற்கனவே அறிவித்துள்ளது.
இந்தியாவில் உள்ள முன்னணி தொழிலதிபர்களில் ஒருவராக இருந்த விஜய் மல்லையா இந்திய வங்கிகளுக்கு செலுத்த வேண்டிய சுமார் 10,000 கோடி ரூபாய் கடனுக்காக, பிரெஞ்சு தீவு ஒன்றில் உள்ள அவரது ஆடம்பர பங்களா, சொகுசு சிறுகப்பல் உள்ளிட்டவற்றை ஏலம் விடும் முயற்சியில் அமலாக்கத்துறை ஈடுபட்டு வருகிறது.
சீனாவில் உள்ள 3 வங்கிகளிடம் இருந்து அனில் அம்பானி வாங்கிய சுமார் 6,000 கோடி ரூபாயை திரும்ப வசூலிக்க லண்டன் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. பணம் செலுத்தவில்லை என்றால் அவரது உடைமைகளும், சொத்துக்களும் ஏலத்திற்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.