பழநி: பழநி தைப்பூச திருவிழாவின் நிறைவான தெப்ப தேரோட்ட நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். திண்டுக்கல் மாவட்டம், பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் பிரசித்தி பெற்ற தைப்பூச திருவிழா பிப். 2ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. முக்கிய நிகழ்ச்சிகளான திருக்கல்யாணம் பிப். 7, தேரோட்டம் பிப். 8ல் நடந்தன. இதுவரை சுமார் 20 லட்சம் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து சென்றுள்ளனர். திருவிழாவின் நிறைவு நாளான நேற்று தெப்ப உற்சவம் நடந்தது.
இதையொட்டி காலை 9.15 மணிக்கு புதுச்சேரி சப்பரத்தில் சுவாமி ரத வீதிகளில் உலா வரும் நிகழ்ச்சி நடந்தது. இரவு 7 மணிக்கு தெப்பத்தேர் உற்சவம் துவங்கியது. தெப்பக்குளத்தின் நடுவில் வள்ளி, தெய்வானை சமேதரராய் முத்துக்குமாரசாமிக்கு மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது. தொடர்ந்து மலர்களாலும், மின்விளக்குகளாலும் அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் சுவாமி தெப்பக்குளத்தை 3 முறை சுற்றி வந்து பக்தர்களுக்கு
அருள்பாலித்தார். டிஎஸ்பி விவேகானந்தன் தலைமையிலான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.
இந்நிகழ்ச்சியில் சித்தனாதன் சன்ஸ் எஸ்ஜி.சிவநேசன், எஸ்ஜி.பழனிவேல், எஸ்ஜி.தனசேகர், கந்தவிலாஸ் செல்வக்குமார், நவீன்விஷ்ணு, நரேஷ்குமரன், கண்பத் ஹோட்டல்ஸ் ஹரிஹரமுத்து, செந்தில், சரவணப்பொய்கை கந்தவிலாஸ் பாஸ்கரன் உள்பட பலர் கலந்து கொண்டனர். ஏற்பாடுகனை பழநி கோயில் செயல் அலுவலர் செல்வராஜ், துணை ஆணையர் செந்தில்குமார் தலைமையிலான திருக்கோயில் அதிகாரிகள் செய்திருந்தனர். நேற்றிரவு 11 மணிக்கு கொடி இறக்குதலுடன் விழா முடிவடைந்தது. தைப்பூச திருவிழா முடிவடைந்ததை தொடர்ந்து நேற்று முதல் மலைக்கோயிலில் தங்கரத புறப்பாடு நடந்து வருகிறது.