×

பத்தாம் வகுப்பு ஆசிரியர்களுக்கு பொதுத்தேர்வு நெருங்கும் வேளையில் அடுத்தடுத்த பயிற்சி வகுப்புகள்: தேவையற்ற கால விரயம் என வேதனை

சேலம்: பொதுத்தேர்வு நெருங்கும் வேளையில், பத்தாம் வகுப்பு ஆசிரியர்களுக்கு அடுத்தடுத்த பயிற்சி வகுப்புகள் வைக்கப்படுவதால், தேவையற்ற கால விரயம் ஏற்படுவதாக வேதனை தெரிவித்துள்ளனர். தமிழகத்தில் எஸ்எஸ்எல்சி, பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு வரும் மார்ச் முதல் வாரத்தில் தொடங்குகிறது. தேர்வுக்கான முன்னேற்பாடுகளில் தேர்வுத்துறையும், கல்வித்துறையும் ஈடுபட்டு வருகிறது. அதேபோல், மாணவர்களை தேர்வுக்கு தயார்படுத்தும் நடவடிக்கைகளில் ஆசிரியர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இதனிடையே, சேலம் மாவட்டத்தில் உள்ள பட்டதாரி ஆசிரியர்களுக்கு, தகவல் தொழில்நுட்பம் (ஐசிடி) குறித்த 2 நாள் பயிற்சி முகாம் நேற்று தொடங்கியுள்ளது. மாவட்டம் முழுவதும் 18 மையங்களில் இந்த பயிற்சி முகாமிற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நேற்று காலை தொடங்கிய ஆங்கிலம்  மற்றும்  கணித பட்டதாரி ஆசிரியர்களுக்கான பயிற்சி இன்றுடன் நிறைவடைகிறது.

தொடர்ந்து, நாளை (13ம் தேதி) மற்றும் நாளை மறுநாள் (14ம் தேதி) ஆகிய 2 நாட்களுக்கு, தமிழ் மற்றும் சமூக அறிவியல் ஆசிரியர்களுக்கும், வரும் 17, 18ம் தேதிகளில் அறிவியல் பட்டதாரி ஆசிரியர்களுக்கும் பயிற்சி நடக்கிறது. மாவட்டத்தில் உள்ள உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் 9, 10ம் வகுப்பெடுக்கும் பட்டதாரி ஆசிரியர்கள் அனைவரும், கட்டாயம் இந்த பயிற்சியில் கலந்துகொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனால், நாளொன்றுக்கு சுமார் 1,200 பேர் இந்த பயிற்சியில் கலந்துகொள்ளும் நிலை ஏற்பட்டுள்ளது. பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுக்கு இன்னும் 2 வாரங்களே உள்ள நிலையில், இந்த பயிற்சியானது வீண் காலவிரயத்தை ஏற்படுத்தும் என ஆசிரியர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து பட்டதாரி ஆசிரியர்கள் கூறியதாவது: சாரண, சாரணியர் இயக்கம், செஞ்சிலுவைச் சங்கம், நாட்டு நலப்பணிகள் திட்டம், பசுமைப்படை போன்ற அமைப்புகளுக்கான பயிற்சி, மாற்றுத்திறன் மாணவர்களுக்கான மேம்பாட்டு பயிற்சி, தற்போது ஐசிடி பயிற்சி என சேலம் மாவட்டத்தில் அடுத்தடுத்து ஆசிரியர்களுக்கான பயிற்சி முகாம்கள் நடந்து வருகின்றன. இடையில் 9, 10ம் வகுப்பிற்கான அடைவுத்தேர்வும் நடத்தப்பட்டது. இதன் காரணமாக, ஆசிரியர்கள் தொடர்ச்சியாக பள்ளியில் இருக்க முடியாமல் பல பணிகள் பாதிக்கப்பட்டன. குறிப்பாக, விரைவில் தொடங்கவுள்ள பத்தாம் வகுப்பு தேர்வுக்கு  மாணவர்களை தயார் செய்வதில் சிக்கல் எழுந்தது. ஏற்கனவே, உள்ளாட்சி தேர்தல், பொங்கல் விடுமுறை போன்றவற்றால் பள்ளிகளுக்கு அதிக நாட்கள் விடுமுறை விடப்பட்டன.

தேர்வுக்கு இரு வாரங்களே உள்ளதால், மெல்ல கற்கும் மாணவர்களை தேர்வுக்கு தயார் செய்ய இதுவே சரியான நேரமாகும். ஆனால், இந்த சமயத்தில் 2 நாட்கள் பயிற்சியை வைத்து அனைவரையும் கட்டாயம் பங்கேற்க அறிவுறுத்தியுள்ளனர். பல மாவட்டங்களில் முன்னதாகவே, இந்த பயிற்சி நடத்தப்பட்டுள்ள நிலையில், சேலம் மாவட்டத்தில் தேர்வு சமயத்தில் நடத்துவது வேதனையளிக்கிறது. அதேசமயம், இந்த பயிற்சியில் மாணவர்களுக்கு கற்பிக்க புதிதாக ஒன்றும் இல்லை. ஏற்கனவே மாணவர்களுக்கு நன்கு தெரிந்த, கம்ப்யூட்டர் கேம்ஸ் உள்ளிட்டவற்றை தான், தற்போது பயிற்சியாக ஆசிரியர்களுக்கு வழங்குகின்றனர். இந்த பயிற்சிக்கு வெறும் 2 மணிநேரமே அதிகமானது. ஆனால், 2 நாட்களுக்கு நடத்த அறிவுறுத்தியுள்ளனர். இதனால், வீண் கால விரயம் தான் ஏற்படும். எனவே, இனிவரும் காலங்களிலாவது, ஆசிரியர்களுக்கு உபயோகமுள்ள  பயிற்சியை, முன்கூட்டியே நடத்தவேண்டும். இவ்வாறு ஆசிரியர்கள் தெரிவித்தனர்.

நிதியை செலவிடவே சிறப்பு பயிற்சி

ஒருங்கிணைந்த கல்வி இயக்கம் சார்பில், ஆசிரியர்களுக்கான பல்வேறு பயிற்சி வகுப்புகள் ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகிறது. ஒவ்வொரு பயிற்சிக்கும் தேவையான செலவிற்கென குறிப்பிட்ட தொகையை, அரசு சார்பில் நிதியாக ஒதுக்கீடு செய்யப்படுகிறது.  பயிற்சியை நடத்தி, அதற்கான அறிக்கையை அனுப்ப வேண்டும். பயிற்சியை நடத்தாத பட்சத்தில், அதற்கான நிதியை அரசு திரும்ப பெற்றுக்கொள்ளும் என கூறப்படுகிறது. தற்போது, ஐசிடி நிதியை செலவிடுவதற்காகவே, இந்த பயிற்சி நடத்தப்பட்டதாக ஆசிரியர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

Tags : workshops ,grade teachers ,election ,Tenth Grade Teachers ,General Election , 10th grade, Teachers, General Elections, Training Courses
× RELATED நகர்புறங்களில் வசிக்கும் மக்கள்...