×

தமிழகம் முழுவதும் அரசு ஐடிஐக்களில் 329 ஜேடிஓ பணியிடங்களில் தகுதியற்றவர்கள் நியமனம்: சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதிக்கு புகார்

விழுப்புரம்:  தமிழகத்தில் உள்ள அரசு ஐடிஐக்களில் 329 இளநிலை பயிற்சி அலுவலர்(ஜேடிஓ) பணியிடங்களில் தகுதியற்றவர்களை நியமித்துள்ளதாகவும், தேர்வு நேரத்தை திடீரென்று குறைத்தும், ஓம்ஆர் ஷூட்டை காலியாக பெற்றுக்கொண்டும், தேசியகவுன்சில் விதிகளை பின்பற்றாமல், பலகோடி பணம் பெற்றுக்கொண்டு இவர்களை நியமித்துள்ளதாக சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதிக்கு புகார் அனுப்பப்பட்டுள்ளது.
தமிழகத்தில் டிஎன்பிஎஸ்சி முறைகேடு பூதாகரமாக வெடித்துள்ளது. முறைகேடாக பணம் கொடுத்து வேலைக்கு சேர்ந்தவர்களிடம் தினசரி இவ்வழக்கில் விசாரணை நடைபெற்று, கைது நடவடிக்கைகள் தொடர்ந்து வருகின்றன.

அதே போல், காவலர்தேர்விலும் போலியான சான்றிதழ்களை கொடுத்து பணியில் சேரமுயன்றவர்களை தமிழ்நாடு சீருடைபணியாளர் தேர்வாணையம் தகுதி நீக்கம் செய்துள்ளது. இப்படி, அடுத்தடுத்து அரசுத்துறை வேலைவாய்ப்பில் முறைகேடு சம்பவங்கள் வெளிவந்துகொண்டிருக்கும் நிலையில், தற்போது தமிழக அரசின் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையின் கீழ் செயல்பட்டுவரும் ஐடிஐக்களில் இளநிலை பயிற்சி அலுவலர் பணியிடங்களில் தகுதியற்றவர்களை பணம் வாங்கிக்கொண்டு பணிஆணை வழங்கியுள்ளதாக வந்துள்ள புகார் மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இது தொடர்பாக விழுப்புரத்தைச் சேர்ந்த சரவணன் என்பவர் சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது; தமிழகஅரசின் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையின் கீழ் இயங்கும் அனைத்து மாவட்ட தொழிற்பயிற்சி நிலையங்களில்(ஐடிஐ) காலியாக உள்ள கடலூர், விழுப்புரம் மாவட்டத்தில் 30 பேர் உள்பட 329 இளநிலை பயிற்சி அலுவலர் பணியிடங்களுக்கான அறிவிப்பை கடந்த 2016ம் ஆண்டு ஜனவரி 12ம் தேதி வெளியிட்டனர்.

நான் உட்பட சுமார் 60 ஆயிரம் பேர் விண்ணப்பித்திருந்தனர். இந்த பதவிக்கு பணியாளர்களை தேர்வுசெய்ய என்சிவிடி சில வழிமுறைகளை வகுத்து அதை மத்திய வேலைவாய்ப்பு பயிற்சி இயக்குநரகம் மூலமாக அனைத்து மாநில வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை இயக்குநரகத்திற்கு 7.1.2016 தேதியிட்டு, அந்த ஆணையின் அடிப்படையில், சேர்க்கை, ஆட்களை தேர்வுசெய்தல், ஐடிஐக்களை புதுப்பித்தல் உள்ளிட்ட எந்த பணிகளாக இருந்தாலும் மேற்கொள்ள வேண்டுமென உத்தரவிட்டிருந்தது. இந்த, ஆணையின்படி இளநிலை பயிற்சி அலுவலர் பதவிகளை தேர்வு செய்வதற்குண்டான ஆணையை, மாநில வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை இயக்குநரகம் ஏற்றுக்கொண்டது. ஆனால், ஆணையில் குறிப்பிட்டுள்ள என்சிவிடி(தேசியகவுன்சில்) வழிமுறைகளை பின்பற்றாமல், சம்பந்தப்பட்ட துறையே தன்னிச்சையாக தேர்வு விதிமுறைகளை வகுத்து, அதன் பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டு இந்தபதவிக்கு விண்ணப்பதாரர்களை தேர்வு செய்துள்ளனர்.

இந்த தன்னிச்சையான தேர்வு முறையானது என்சிவிடியின் விதிகளுக்கு எதிரானதாகும். மேலும், தன்னிச்சையான தேர்வு முறையில் பின்பற்றப்பட்ட தேர்வு நடைமுறைகள் மற்றும் அதற்கு நிர்ணயிக்கப்பட்ட மதிப்பெண் முறைகள் உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு எதிரானதாகும். இந்த தன்னிச்சையான தேர்வு முறையில் எழுத்து தேர்விற்கு 3 மணிநேரம் ஒதுக்கப்படுவதாக அறிவிப்பாணையில் தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் எழுத்துத்தேர்வு ஆரம்பிக்கும்போது வினாத்தாளில் 2அரை மணிநேரம் எனக்குறிப்பிட்டு தேர்வு நேரத்தை கடைசியில், குறைத்து பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டனர். வினாத்தாளை தேர்வு ஆரம்பிப்பதற்கு 30 நிமிடங்கள் சம்பந்தப்பட்ட அலுவலர்கள், தாசில்தார் முன்னிலையில் பிரித்து கசியவிட்டனர். மேலும் தேர்வு எழுதிய பல்வேறு விண்ணப்பதாரரிடம் ஓஎம்ஆர் ஷூட் ஐ முழுமையாக பூர்த்தி செய்து வாங்காமல் காலியாக பெற்றுக்கொண்டு, பின் உயர்அதிகாரிகள் உதவியுடன் சரியான விடையை பூர்த்தி செய்து நூற்றுக்கணக்கான தகுதியற்ற நபர்களை தேர்வுசெய்துள்ளனர்.

தேர்வு முடிவுகளை அவசரமாக வெளியிட்டார்கள்

இது குறித்து சரவணன் கூறுகையில், தேர்வுஎழுதிய சில நாட்களில் முடிவுகளை அவசரமாக வெளியிட்டார்கள். தேர்வில் கேட்கப்பட்ட வினாத்தாட்களில் 5 கேள்விகள் தவறாக இருந்தது. டிஎன்பிஎஸ்சியில், தவறான கேள்விக்கு புகார்தெரிவிக்க காலஅவகாசம் வழங்கப்படும். ஆனால் இதையெல்லாம் எடுத்துக்கொள்ளாமல், தவறான கேள்விகளை திருத்தி அவசரமாக பணி ஆணை வழங்கியுள்ளார்கள். பல்வேறு குளறுபடிகள், முறைகேடுகள் நடந்திருப்பதால் கடந்த 2016-17 ஒன்றரை ஆண்டுகாலம், யாரையும் பணிக்கு தேர்வு செய்யக்கூடாது என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் தடை ஆணை பெற்றிருந்தேன். மேலும், என்னுடைய மனு விசாரணையில் இருக்கும்போதே, கடந்த ஆண்டு தகுதியற்றவர்களுக்கு, முறைகேடாக பணிஆணை வழங்கப்பட்டுள்ளது. என்னுடைய மனுமீது விசாரணை நடந்து  நல்லதீர்ப்பு வரும் என்ற நம்பிக்கையில் இருப்பதாக அவர் கூறினார்.

மதுரையை சேர்ந்தவர்களே அதிகம் தேர்ச்சி பெற்றது எப்படி?

329 பணியிடங்களில் அதிகளவு மதுரை மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளார்களாம். இந்த துறையின் இயக்குநர், இணை இயக்குநர் மதுரை மாவட்டத்தைச் சார்ந்தவர்களே இதற்கு முக்கியகாரணம் என்று புகார்தாரர் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளார். இதன் மூலம், தேர்வுசெய்யப்பட்ட விண்ணப்பதாரர்களிடமிருந்து, பல்வேறு கோடிகள் உயர்அதிகாரிகளுக்கும், அமைச்சர்களுக்கும் கைமாறியுள்ளது. இது குறித்து சிபிசிஐடிக்கு பல்வேறு கோரிக்கைகளை வைத்தும், அந்த துறை எந்த விசாரணையும் நடத்தாமல் ஊழல் நடந்த துறையின் இயக்குநருக்கே என்னுடைய புகார் மனுவை அனுப்பி விசாரணையை முடித்து விட்டதாகவும் நீதிபதிக்கு அனுப்பியுள்ள புகார் மனுவில் தெரிவித்துள்ளார்.


Tags : ITIs ,Tamil Nadu ,JTOs , Tamil Nadu, Government ITI, Appointment, Madras Court, Chief Justice
× RELATED சுதந்திர போராட்டம் குறித்த பழங்கால...