புதுடெல்லி: உள்துறை அமைச்சகத்தின் இணையதளத்தில் இருந்து அசாம் குடிமக்கள் பதிவேட்டின் விவரங்கள் மாயமாகியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வெளிநாட்டினரின் சட்டவிரோத குடியேற்றத்தை தடுக்கும் விதமாக அசாம் மாநிலத்தில் குடிமக்கள் பதிவேடு தயாரிக்கப்பட்டு அமல்படுத்தப்படுகிறது். அசாம் குடிமக்கள் பதிவேடு குறித்த விவரங்கள் அனைத்தும் உள்துறை அமைச்சகத்தின் இணையதளத்தில் வெளியிடப்படிருந்தது. இந்த நிலையில், உள்துறை அமைச்சகத்தின் இணையதள சர்வரில் இருந்து அசாம் குடிமக்கள் பதிவேடு விவரங்கள் திடீரென மாயமாகியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து விளக்கமளித்துள்ள உள்துறை அமைச்சகம், தொழில்நுட்ப கோளாறு காரணமாக விவரங்களை பார்க்க முடியவில்லை என்று தெரிவித்துள்ளது. அசாம் குடிமக்கள் பதிவேடு குறித்த விவரங்கள் பாதுகாப்பாக இருப்பதாக தெரிவித்துள்ள உள்துறை அமைச்சகம், விரைவில் கணினி சர்வர் கோளாறு சரி செய்யப்படும் என்று தெரிவித்துள்ளது. இந்நிலையில், அசாம் குடிமக்கள் பதிவேட்டின் முக்கிய தகவல்கள் உள்துறை அமைச்சகத்தின் இணையதளத்தில் இருந்து மாயமாகியிருப்பது மத்திய அரசின் டிஜிட்டல் தகவல் மாற்றத்தின் தோல்வியை வெளிப்படுத்தியுள்ளதாக விமர்சனங்களும் எழுந்துள்ளன.