×

முன்னால் சென்ற பைக் மீது அரசு பஸ் மோதி 2 பேர் பலி: தீப்பிடித்து சாம்பலானது இரு வாகனங்கள்

திருமலை: ஆந்திராவில் பைக் மீது மோதி விபத்துக்குள்ளானதில், அரசு பஸ் தீப்பிடித்து எரிந்தது. இதில் 2 பேர் உடல் கருகி பரிதாபமாக இறந்தனர். ஆந்திர மாநிலம், கடப்பாவில் இருந்து அரசு பஸ் ஒன்று பயணிகளை ஏற்றிக் கொண்டு திருப்பதி நோக்கி நேற்று முன்தினம் வந்தது. இரவு 11 மணியளவில் கடப்பா- சென்னை நெடுஞ்சாலையில்  ரயில்வே கோடூரு மண்டலம், லட்சுமிகாரிபல்லி அருகே வந்தபோது முன்னால் ஒரே பைக்கில் சென்று கொண்டிருந்த 2 பேர் மீது அரசு பஸ் எதிர்பாராதவிதமாக மோதியது. இதில் பஸ்சுக்கு அடியில் சிக்கிய பைக் சாலையில் உரசியபடி சிறிது தூரம் இழுத்துச் செல்லப்பட்டது. அப்போது பைக்கில் இருந்த பெட்ரோல் கசிந்து தீப்பிடித்தது. இதில் பைக்கும், பஸ்சும் தீ பிடித்து எரிந்தது. இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த டிரைவர் உடனே பஸ்சை நிறுத்தினார்.

பஸ்சில் இருந்த பயணிகள் அலறியடித்தபடி கீழே இறங்கி ஓட்டம் பிடித்தனர்.  இந்த விபத்தில் பஸ்சும், பைக்கும் முழுவதுமாக எரிந்தன. இது குறித்து ரயில்வே கோடூரு மண்டல தீயணைப்பு துறை மற்றும் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன் பேரில் தீயணைப்பு வீரர்கள் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். இந்த விபத்தில் காயமடைந்த 20க்கும் மேற்பட்டோரை மீட்டு சிகிச்சைக்காக கடப்பா அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.  இதில் பைக்கில் சென்ற ஒருவரும், பஸ்சில் இருந்த ஒரு பயணியும் உடல் கருகிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டனர். இதையடுத்து போலீசார் சடலங்களை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக கடப்பா அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து ரயில்வே கோடூரு போலீசார் வழக்குப்பதிவு செய்து இறந்த நபர்கள் யார், காயமடைந்தவர்கள் யார்? என விசாரணை நடத்தி வருகின்றனர்.


Tags : state bus crashes , Government bus, 2 killed, two vehicles
× RELATED தருமபுரி அருகே இருசக்கர வாகனம் மீது அரசு பேருந்து மோதி 2 பேர் உயிரிழப்பு