×

1008 பேர் முகாமிட்டும்... பாஜ.வுக்கு பலனில்லை: தோல்வி அடைந்த அமித்ஷாவின் வியூகம்

புதுடெல்லி: டெல்லியில் மீண்டும் ஆட்சியை ஆம் ஆத்மி கட்சி கைப்பற்றியுள்ளது. பாஜ தலைவர் அமித்ஷாவின் தேர்தல் வியூகம் தோல்வியை சந்தித்துள்ளது. பாஜ.வின் 250 எம்.பி.க்கள், தமிழக தலைவர்கள், சினிமா நட்சத்திரங்கள், உச்சக்கட்டமாக பிரதமர் மோடியே பிரசாரக் களத்தில் குதித்தும், பாஜ.வுக்கு ஒற்றை இலக்கிலேயே வெற்றி கிடைத்துள்ளது. டெல்லி சட்டப்பேரவை தேர்தலில், ஆளும் ஆம் ஆத்மி 3வது முறையாக ஆட்சியை தக்கவைத்துள்ளது. இந்த தேர்தல் பிரசாரத்தில், ஆம் ஆத்மி, மத்தியில் ஆளும் பாஜ.வுக்கு சிம்ம சொப்பனமாக இருந்தது. யூனியன் பிரதேசமான டெல்லியின் அதிகாரம் முழுவதும் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருந்தும், தேர்தல் முடிவுகள் ஆம் ஆத்மிக்கு சாதகமாகவே அமைந்தது. ஐந்து ஆண்டுகளாக டெல்லியை யார் நிர்வகிப்பது என்று இருந்தாலும்கூட, தேர்தல் பிரசாரத்தில் கட்சி நிர்வாகிகளால் கட்டவிழ்த்து விடப்பட்ட பேச்சுக்கள் பல்வேறு தரப்பினருக்கும் அதிருப்தியை ஏற்படுத்தியது.  

பாஜ.வை பொறுத்தவரை நாடு முழுவதும் இருந்து கட்சியின் முழு படையையும் டெல்லி பிரசாரத்திற்கு பயன்படுத்தியது. தமிழகத்தில் இருந்து பாஜ தலைவர்கள், டெல்லி சென்று தமிழர் பகுதிகளில் பிரசாரம் மேற்கொண்டனர். 70 ஆண்டுகால சுதந்திர இந்தியாவில் இதுவரை நடந்த தேர்தல்களில் இல்லாத ஒன்றாக 70 சட்டப்பேரவை தொகுதிக்கும், பாஜ.வின் 250 எம்பிக்கள் தேர்தல் பணியில் நியமிக்கப்பட்டனர். தேர்தல் பிரசார அணியின் தலைவராக கட்சியின் முன்னாள் தேசிய தலைவரும், உள்துறை அமைச்சருமான அமித்ஷா தலைமை வகித்தார். அவர் வீடு, வீடாகச் சென்று, கட்சியின் வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரசாரம் செய்தார். பல்வேறு கூட்டங்களில் மாலை நேரங்களில் உரையாற்றினார். அதாவது சுமார் 1000க்கும் மேற்பட்டவர்கள் இந்த தேர்தலில் பாஜ.வுக்காக சுற்றி, சுற்றி பிரசாரம் மேற்கொண்டு வந்தனர்.

பாஜ தலைவர்கள் அனைவரும், பல பேரணிகளின் மூலம் ஆம் ஆத்மி, காங்கிரஸ் கட்சியை சாடியே பேசி வந்தார். உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் 12 தேர்தல் பேரணிகளில் உரையாற்றினார். இந்த தேர்தலில் பிரதமர் மோடி பிரசாரத்தில் ஈடுபடமாட்டார் என்று கூறப்பட்ட நிலையில், அவரும் கடைசி கட்டமாக இரண்டு நாட்கள் பிரசாரத்தில் கலந்து கொண்டார். முத்தலாக், பிரிவு 370 மற்றும் குடியுரிமை (திருத்த) சட்டம் (சிஏஏ) போன்ற பிரச்னைகள் குறித்து பிரதமர் மோடி, தொலைநோக்கு முடிவுகள் எடுத்ததாக கூறி பிரசாரம் மேற்கொண்டனர். வழக்கம்போல், டெல்லிக்கும் ‘மோடி பிராண்ட்’ தேவைப்பட்டது.

குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக டெல்லியின் ஜமியா பல்கலை போராட்டம், ஷாஹீன் பாக் பகுதியில் மக்கள் தொடர் போராட்டம் நடத்தி வரும் நிலையில், பாஜ தலைவர்கள் அதை கொச்சைப்படுத்தி பேசினர். ஆனால், ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவர்கள், டெல்லியின் சட்டம் ஒழுங்கு மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருப்பதாகவும், போராட்டம் நடத்துவது மக்களின் உரிமை என்று பிரசாரம் செய்தது. பெரும்பான்மை மக்களின் ஆதிக்கத்தை நிலைநாட்ட பாஜ முயன்றாலும்கூட, ஆம் ஆத்மி கட்சியானது வளர்ச்சி என்ற பெயரில் பிரசாரத்தை முன்னெடுத்தது. அதாவது, கல்வி, மின்சாரம், நீர் மற்றும் சுகாதாரம், நேர்மை, நிர்வாக நோக்கம் மற்றும் செயல்திறன் ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் கொடுத்து முதல்வர் கெஜ்ரிவால் பிரசாரம் மேற்கொண்டார்.  

காங்கிரஸ் கட்சியைப் பொறுத்தவரை, 1998 மற்றும் 2013ம் ஆண்டுக்கு இடையில் டெல்லியை ஆட்சியை நடத்திய காங்கிரஸ் கட்சி 2015 தேர்தலில் இருந்தே பின்னடைவை சந்தித்து வருகிறது. குறிப்பாக, கெஜ்ரிவாலின் அரசியல் வளர்ச்சிக்கு பின், காங்கிரஸ் கட்சி மக்களவை, சட்டப்பேரவை தேர்தல்களில் படுதோல்வியை சந்தித்து வந்தது. இந்த தேர்தலிலும் அதுதான் நடந்துள்ளது. இந்த தேர்தலில் ராஷ்டிரிய ஜனதா தளம் (ஆர்ஜேடி) உடன் இணைந்து காங்கிரஸ் போட்டியிட்டது. ஆனால், குறிப்பிடும்படியான வெற்றியை பெறவில்லை. காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தனது பிரசாரத்தின்போது, ​​பாஜ மற்றும் ஆம் ஆத்மி கட்சி சமூகத்தில் வெறுப்பை பரப்புவதாக குற்றம் சாட்டினார். வேலை இழப்பு பிரச்னை தொடர்பாக காங். பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி பிரசாரம் மேற்கொண்டார். இந்நிலையில், டெல்லியில் நடக்கும் தொடர் போராட்டம், துப்பாக்கிச்சூடு, பிரமாண்ட பிரசாரம், தேர்தல் நடத்தை விதிமீறல், சர்ச்சை பேச்சுகள் போன்றவற்றால் பாஜ தோல்வியை சந்தித்துள்ளது.

Tags : BJP ,Amit Shah , 1008 people, camp, baja., Fruitless, failure, amitsha strategy
× RELATED ஜம்மு – காஷ்மீரில் செப்டம்பருக்குள்...