சென்னை: தமிழக அரசின் டெல்லி பிரதிநிதி தளவாய் சுந்தரத்தை கட்சியில் இருந்து நீக்க வலியுறுத்தி கன்னியாகுமரி மாவட்ட நிர்வாகிகள் திடீர் போர்க்கொடி தூக்கினர். அதிமுக கட்சியின் வளர்ச்சி பணி மற்றும் தேர்தல் பணிகள் குறித்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் சென்னையில் 4 நாட்கள் அதிமுக மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்று வருகிறது. நேற்று 2வது நாளான நேற்று மாலை முதல்வர் தலைமையில் சென்னை, ராயப்பேட்டையில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் ஆலோசனை நடைபெற்றுக் கொண்டிருந்தது. அப்போது, கன்னியாகுமரி மாவட்ட நிர்வாகிகள் சுமார் 50 பேர் தலைமை அலுவலகத்தின் பிரதான வாசல் அருகே நின்று கட்சி தலைமைக்கு எதிராக கோஷம் எழுப்பினர்.
முக்கியமாக அவர்கள், டெல்லி பிரதிநிதி தளவாய்சுந்தரத்தை அதிமுக கட்சியில் இருந்தும், டெல்லி பிரதிநிதி பதவியில் இருந்தும் நீக்க வேண்டும் என்று கோஷம் எழுப்பினர். தளவாய்சுந்தரம், கன்னியாகுமரி மாவட்டத்தில் தனக்கு ஆதரவாக இருப்பவர்களிடம் பணத்தை வாங்கிக் கொண்டு செயல்படுகிறார்கள். கட்சிக்கு விசுவாசமாக இருப்பவர்களை பற்றி தலைமைக்கு தவறவான தகவல் அளித்து வருவதாகவும், கட்சி தலைமையை நெருங்க விடாமல் அவர் தடுத்து வருவதாகவும் குற்றம் சாட்டினர். இந்த சம்பவம் அதிமுக தலைமை அலுவலகத்தில் பெரும் பரபரப்பை ஏறப்படுத்தி உள்ளது.