காவேரிப்பாக்கம்: காவேரிப்பாக்கம் அடுத்த தர்மநீதி கிராம ஏரியில் உள்ள கருவேல மரங்கள் வெட்டி கடத்தப்படுவதை தடுக்க வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். காவேரிப்பாக்கம் ஊராட்சி ஒன்றியம் தர்மநீதி கிராமத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதி மக்களின் பிரதான தொழில் விவசாயம். இப்பகுதியில் சுமார் 15 ஹெக்டர் பரப்பில் ஏரி உள்ளது. இந்த ஏரிக்கு காவேரிப்பாக்கம் ஏரியில் இருந்து தண்ணீர் கிடைக்கிறது. இந்த ஏரியின் தென்திசையில் மக்கிலியன் கால்வாயும், வடதிசையில் கொசஸ்தலை ஆறும் உள்ளது. இதனால் இந்த கிராமம் எப்போதும் பசுமையாக காணப்படும். இந்த ஏரியில் கருவேல மரங்கள் அடர்ந்து, வளர்ந்துள்ளது. இவற்றை சில சமூக விரோதிகள் பகல் நேரங்களிலேயே வெட்டி, மினிவேன் மற்றும் டிராக்டர்களில் கடத்தி விற்பனை செய்து வருவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். ஒருசிலர் கருவேலம் மரங்களின் மேல்பட்டைகளை அறுத்து சாராய வியாபாரிகளுக்கு விற்பனை செய்வதாகவும் கூறுகின்றனர்.
மேலும் இந்த ஏரியில் உள்ள கருவேல மரங்களை கடந்த 1999-2000-ல் வனத்துறை அதிகாரிகளால் ஏலம் விடப்பட்டது. பிறகு 20 ஆண்டுகள் வளர்ந்து தற்போது கம்பீரமாக காட்சி அளிக்கின்றன. இதனை சில சமூக விரோதிகள் வெட்டி கடத்திச்செல்கின்றனர். இதனை தடுக்க வனத்துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும். அதேபோல் ஏரிக்கு வரும் கால்வாயில் ஆங்காங்கே முள்புதர்கள் மண்டியுள்ளது. இதனையும் அகற்ற வேண்டும் என்றனர்.