×

பாரிய காட்டுத்தீயை தொடர்ந்து 30 ஆண்டுகளில் இல்லாத அளவு பேய் மழை: ஆஸ்திரேலியாவை ஆட்டிப்படைக்கும் இயற்கை சீற்றங்கள்!

சிட்னி: ஆஸ்திரேலியாவில் பாரிய காட்டுத்தீயை தொடர்ந்து 30 ஆண்டுகளில் இல்லாத அளவு பேய் மழை பெய்து வருகிறது. ஆஸ்திரேலியாவை வாட்டி வதைத்த கடும் வெயிலால் அந்த நாட்டின் தென்கிழக்கு பகுதியில் அமைந்துள்ள நியூ சவுத் வேல்ஸ் மற்றும் குயின்லாந்து மாகாணங்களில் தொடர்ந்து 6 மாதங்களாக காட்டுத்தீ பற்றி எரிந்தது. இந்த காட்டுத்தீயில் ஆயிரக்கணக்கான வீடுகளும், பல கோடி ஏக்கரிலான காடுகளும் அழிந்து போனதோடு, லட்சக்கணக்கான வன உயிரினங்கள் செத்து மடிந்தன. இது சர்வதேச அளவில் பெரும் கவலையை ஏற்படுத்திய நிலையில், அங்கு அண்மையில் காட்டுத்தீயின் தாக்கம் சற்று குறைந்து இயல்பு நிலை திரும்ப தொடங்கியது.

இந்த நிலையில் ஆஸ்திரேலியா கடலில் உருவாகியுள்ள டேமியன் புயலால், நியூ சவுத் வேல்ஸ் மற்றும் குயின்ஸ்லாந்தின் சில பகுதிகளில் கடந்த 30 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கனமழை கொட்டி தீர்த்தது. மணிக்கு 200 கிலோ மீட்டர் வேகத்தில் வீசிய சூறாவளியால் மரங்கள் சாய்ந்தன. சில இடங்களில் கூரைகள் காற்றில் பறந்தன. சிட்னியில் கடந்த நான்கு நாட்களில் 391.5 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் அடுத்த சில நாட்களுக்கு இந்த பேய் மழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த பேய் மழை காரணமாக 2 மாகாணங்களிலும் உள்ள பல நகரங்களில் வெள்ளம் கரைபுரண்டோடுகிறது.

நூற்றுக்கணக்கான வீடுகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. சாலைகளில் வெள்ளம் ஆறாக ஓடுவதால் சாலை போக்குவரத்து முடங்கியுள்ளது. மேலும் சில இடங்களில் மின்சாரம் மற்றும் தகவல் தொடர்பும் துண்டிக்கப்பட்டு உள்ளன. ஆயிரக்கணக்கான மக்கள் வீடுகளை இழந்து, நிவாரண முகாம்களில் தஞ்சமடைந்துள்ளனர். இருப்பினும், நியூ சவுத் வேல்ஸ் மாநிலம் முழுவதும் பரவி வரும் காட்டுத்தீயைக் கட்டுப்படுத்த இது உதவியதால் மழை குறித்து மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். அதே வேளையில், காட்டுத்தீயால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் எளிதில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் இருப்பதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags : wildfire ,disasters ,Australia , Australia, storms, rain, forest fires
× RELATED ஆஸ்திரேலியா – இந்தியா டெஸ்ட் தொடர் அட்டவணை