×

பொள்ளாச்சி பாலியல் வழக்கை 3-வது நீதிமன்றமாக கோவை மகளிர் நீதிமன்றத்துக்கு மாற்றம்

கோவை: பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கை  3-வது நீதிமன்றமாக கோவை மகளிர் நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டுள்ளது. பொள்ளாச்சியில் பெண்களை பாலியல் வன்கொடுமை செய்து ஆபாச விடியோ எடுத்து மிரட்டி பணம் பறித்ததாக கடந்த ஆண்டு பிப்ரவரி 24-ம் தேதி பாதிக்கப்பட்ட இளம்பெண் ஒருவர் புகார் அளித்தார். இந்த புகாரின் பேரில் சபரிராஜன், சதீஷ், வசந்தகுமார் ஆகிய மூவரை காவல் துறையினர் கைது செய்தனர். மேலும் இந்த வழக்கில் தேடப்பட்டு வந்த திருநாவுக்கரசு மார்ச் மாதம் கைது செய்யப்பட்டார்.

இதனையடுத்து பாதிக்கப்பட்ட பெண்ணின் சகோதரரை பொள்ளாச்சி ஜோதி நகர் பேருந்து நிலையத்தில்  தாக்கியதாக பாபு, செந்தில், வசந்தகுமார் ஆகிய 3 பேர் கைது செய்யப்பட்டனர். தலைமறைவாக இருந்த மணிவண்ணன் என்பவர் நீதிமன்றத்தில் சரண் அடைந்தார். இதனையடுத்து அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் அவருக்கும் பாலியல் வழக்கில் தொடர்பு இருப்பது தெரியவந்தது, அதன்பின்னர் அவரும் வழக்கில் சேர்க்கப்பட்டார்.

இந்த வழக்கை சிபிஐ தற்போது விசாரித்து வரும் நிலையில் இந்த வழக்கு 3-வது நீதிமன்றமாக கோவை மகளிர் நீதிமன்றத்துக்கு இன்று மாற்றப்பட்டது. கோவை மாவட்ட தலைமை குற்றவியல் நீதிமன்றத்திலிருந்து மாவட்ட முதன்மை நீதிமன்றத்துக்கு ஏற்கெனவே மாற்றப்பட்ட நிலையில் தற்போது இந்த வழக்கு கோவை மகளிர் நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டுள்ளது. மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் 5 பேரும் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில், விசாரணையை 25ஆம் தேதிக்கு ஒத்திவைத்த நீதிபதி, வழக்கை மகளிர் நீதிமன்றத்துக்கு மாற்றி உத்தரவிட்டார்.


Tags : Pollachi Sex Case ,womens Court ,Coimbatore , Pollachi, abused Case, Coimbatore Women's Court, Transfer
× RELATED கோவை மாநகராட்சி நீச்சல் குளத்தில் குவியும் சிறுவர்கள்