×

தூத்துக்குடியில் பரபரப்பு ஓடும் ஆட்டோவில் டிரைவர் நெஞ்சுவலியால் சாவு: உயிர் போகும் நிலையிலும் மாணவிகளை காப்பாற்றினார்

தூத்துக்குடி: தூத்துக்குடி ஸ்டேட் பாங்க் காலனியைச் சேர்ந்தவர் ராமலிங்கம்(54). ஆட்டோ டிரைவரான இவர், பள்ளிகளுக்கு மாணவிகளை ஏற்றிச் சென்று வந்தார். நேற்று மாலை ராமலிங்கம் தனது ஆட்டோவில் வழக்கம் போல் மாணவிகளை ஏற்றிச் செல்வதற்காக விஇ ரோட்டில் ஆட்டோவை நிறுத்தியுள்ளார். மாணவிகள் பலர் ஆட்டோவில் ஏறிய நிலையில் திடீரென ராமலிங்கம் மயங்கி விழுந்துள்ளார். இதனை கண்ட அக்கம் பக்கத்தினர் அவருக்கு முதலுதவி அளித்தனர். இதனையடுத்து அவர் தனது உடல் நிலையை கருத்தில் கொண்டு வேறு ஒரு ஆட்டோவை அழைத்துள்ளார். ஆனால், வேறு ஆட்டோ ஏதும் வரவில்லை என்பதால் தனது ஆட்டோவிலேயே மாணவிகளையும் பள்ளிச் சிறுமிகளையும் ஏற்றிக் கொண்டு வழக்கம்போல் சென்றார். தூத்துக்குடி கீழரதவீதியில் ஆட்டோ வந்து கொண்டிருந்தபோது அவருக்கு மீண்டும் நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த அவர், மாணவிகளை கருத்தில் கொண்டு வலியை தாங்கியபடி ஆட்டோவை ரோட்டோரமாக நிறுத்தி விட்டு இருக்கையிலேயே மயங்கி சரிந்துள்ளார்.

 இதைக்கண்டு மாணவிகள், மாமா.... மாமா... என கதறினர். அங்கிருந்தவர்கள் ஆம்புலன்ஸ் மூலம் அவரை மீட்டு அங்குள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவரை பரிசோதித்த டாக்டர்கள், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து தகவலறிந்த பெற்றோர் ஆட்டோவில் இருந்த தங்களது குழந்தைகளை அழைத்துச் சென்றனர்.தனது உயிர் போகும் நிலையிலும் கூட ஆட்டோ வை பத்திரமாக நிறுத்தி மாணவிகளின் உயிரை காத்த ஆட்டோ டிரைவர் ராமலிங்கத்தின் செயலை நினைத்து மாணவிகளின் பெற்றோரும், அங்கிருந்தவர்களும் நெகிழ்ந்தனர்.

Tags : Thoothukudi ,road accident ,area Driver , Thoothukudi , Driver dies , running auto
× RELATED தூத்துக்குடி மருத்துவமனையில் ஏ.சி. வார்டு தொடக்கம்..!!