மதுரை: மீனாட்சியம்மன் கோயிலில் மாசி மாத திருவிழா கொடியேற்றத்துடன் நேற்று துவங்கியது. மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் வருடம் முழுவதும் திருவிழா நடைபெறுகிறது. கடந்த மாதம் தை திருநாளை முன்னிட்டு மாரியம்மன் தெப்பத்திருவிழா உள்ளிட்ட பல்வேறு நிழ்ச்சிகள் நடைபெற்றது. அதனை தொடர்ந்து மாசி மாதம் பிறப்பை ஒட்டி நேற்று மீனாட்சியம்மன் கோயிலில் மாசி மக கொடியேற்றம் காலை 9.30 மணிக்கு நடந்தது. சுவாமி சன்னதியில் உள்ள கொடிமரத்தில் கொடி ஏற்றப்பட்டு சிறப்பு பூஜை மற்றும் தீபாராதனை நடந்தது. அப்போது சிறப்பு அலங்காரத்தில் மீனாட்சி அம்மன், சுந்தரேஸ்வரர் மற்றும் பிரியாவிடையுடன் வெள்ளி ரதத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தனர்.
காலை மற்றும் மாலை நேரங்களில் சித்திரை வீதிகளில் அம்மன், சுந்தரேஸ்வரர் மற்றும் பிரியாவிடையுடன் வலம் வருகின்றனர். மார்ச் 18ம் தேதி பிரதான கொடியிறக்கி கணக்கு வாசித்தல் நடைபெற்று உற்சவம் நிறைவடையும். மார்ச் 18ம் தேதி கணக்கு வாசித்தல் உள்ளதால் கோயில் சார்பாகவும், உபயமாகவும், மீனாட்சி அம்மனுக்கு உபய தங்கரதம் உலா மற்றும் உபய திருக்கல்யாணம் போன்ற சிறப்பு நிகழ்ச்சிகள் பதிவு செய்து நடத்திட இயலாது எனத்தெரிவிக்கப்பட்டுள்ளது. கோயில் இணை கமிஷனர் நடராஜன் மற்றும் கோயில் ஊழியர்கள் விழா ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.