×

அதீத ஸ்மார்ட்போன் மற்றும் சமூக வலைதளங்களின் பயன்பாடு தற்கொலைக்கு வழிவகுக்கும்: ஆய்வில் தகவல்

புதுடெல்லி: ஸ்மார்ட்போன் மற்றும் சமூக ஊடகங்களில் அதிக நேரம் செலவிடுவது இளம் பருவத்தினரிடையே மன உளைச்சல் மற்றும் தற்கொலைக்கு வழிவகுக்கும் என்பதை ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். கனடாவின் மருத்துவ சங்க இதழில் தூக்கம், கல்விப்பணி, சமூக செயல்பாடு, உறவுகள் ஆகியவை பாதிக்காத வகையில் ஸ்மார்ட் போன்களை எப்படி பயன்படுத்துவது என்பது குறித்து பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு வழிகாட்டுகிற ஆய்வு கட்டுரை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.

அதில், ஸ்மார்ட்போன்கள் மற்றும் சமூக ஊடகங்களின் பயன்பாட்டை குறைக்க வேண்டுமெனில் மருத்துவர்கள், ஆசிரியர்கள் மற்றும் குடும்பத்தினர் அனைவரும் இணைந்து செயல்பட வேண்டும் என முதன்மை ஆய்வாளர் எலியா அபி தெரிவித்துள்ளார். மேலும், இன்றைய இளம் பருவத்தினர் சமூக ஊடகங்கள் இல்லாத உலகத்தை அறியாதவர்கள், டிஜிட்டல் இடையூறுகள், சமூக ஊடக செயல்பாடுகளின் தாக்கம் இவர்களிடையே சாதாரணமாகிவிட்டன. சமூக ஊடக பயன்பாட்டை முற்றிலுமாக ஒழிப்பதை விட, அதன் பயன்பாட்டை குறைப்பதற்கு முயற்சிக்க வேண்டும்.

குழந்தைகளின் உரையாடல்களின் ஒரு பகுதியாக பெற்றோர்கள் எப்போதுமே இருக்க வேண்டும் என்றும் ஆராய்ச்சியாளர்கள் பரிந்துரைத்துள்ளனர். அதிலும், முக்கியமாக சமூக வலைத்தளங்களினால் ஏற்படும் அபாயங்களை எவ்வாறு தடுப்பது, ஸ்மார்ட்போன் பயன்பாட்டிற்கு ஒரு வரையறை விதிப்பது அவசியம் என்றும் இளம் பருவத்தினரிடம் பெற்றோர்கள் கலந்துரையாடி எந்த ஒரு விஷயத்தையும் அவர்களுக்கு புரிய வைக்க முயற்சி செய்ய வேண்டும்.

ஏனென்றால், இளைஞர்கள் வாழ்க்கையில் சமூக ஊடகங்கள் எதிர்மறையான தாக்கத்தை அதிகளவில் ஏற்படுத்துகின்றன மற்றும் ஸ்மார்ட்போன், சமூக ஊடகங்களில் அதிக நேரம் செலவிடுவது இளம் பருவத்தினரிடையே மன உளைச்சலுக்கும், தற்கொலைக்கும் வழிவகுக்கும் என்றும் ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். அமெரிக்காவின் சமீபத்திய கருத்துக்கணிப்பில், 54 சதவீத இளைஞர்கள் ஸ்மார்ட்போன்களில் அதிக நேரம் செலவழிக்கிறார்கள் என்றும் அதில் 50 சதவீதம் பேர் ஸ்மார்ட்போன்களின் பயன்பாட்டைக் குறைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாகவும் ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.


Tags : suicide ,Teenagers , Smartphone, social network, suicide, depression, study
× RELATED தெலங்கானாவில் மேலும் 2 விவசாயிகள் தற்கொலை