சென்னை: நுங்கம்பாக்கம், குமரப்பா தெருவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் குடும்பத்துடன் வசித்து வருபவர் ராஜேந்திரன் (58). அதே பகுதியில் உள்ள ஜோசியர் தெருவில் மளிகை கடை நடத்தி வருகிறார். இந்நிலையில், நேற்று முன்தினம் காலை ராஜேந்திரன் வழக்கம் போல் நடைபயிற்சிக்கு சென்றுள்ளார். அவரது மனைவி சுமதி கதவை பூட்டாமல் தூங்கியுள்ளார்.
இதற்கிடையில் பிற்பகல் 2 மணியளவில் ராஜேந்திரனின் மனைவி சுமதி பீரோவை திறந்து பார்த்த போது அதில் வைத்திருந்த 2 செயின் உள்பட 19 சவரன் நகை மற்றும் 2 லட்சம் மாயமானதை கண்டு அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்து நுங்கம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். போலீசார் வழக்கு பதிவு செய்து அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவை சோதனை செய்தபோது, காலையில் ராஜேந்திரன் வாக்கிங் சென்ற நேரத்தில், பைக்கில் அங்கு வந்த மர்மநபர், வீட்டிற்குள் சென்று, சிறிது நேரத்தில் வெளியில் செல்வது பதிவாகி இருந்தது. அதில் பதிவான கொள்ளையன் உருவத்தை வைத்து விசாரிக்கின்றனர்.