செங்கோட்டை: செங்கோட்டையில் நள்ளிரவில் மூதாட்டி அடித்து கொலை செய்யப்பட்டார். குடிக்க பணம் தர மறுத்ததால் இந்த சம்பவம் நடந்துள்ளது. இதுதொடர்பாக அவரது பேரனை போலீசார் தேடி வருகின்றனர். தென்காசி மாவட்டம் செங்கோட்டை விஸ்வநாதபுரம் புதுமனை தெருவை சேர்ந்தவர் முகம்மது யூசுப் மனைவி மும்தாஜ்(65). இவருக்கு ஒரு மகன், ஒரு மகள். இவர்களில் மகன் வழி பேரன் அப்துல்கலாம்(32) என்பவர் செங்கோட்டையில் ஆட்டோ ஓட்டி வருகிறார். தாய் மற்றும் குடும்பத்தினருடன் அங்கு வசித்து வருகிறார். பாட்டி மும்தாஜ் மட்டும் விஸ்வநாதபுரத்தில் தனியாக வசித்து வருகிறார். கொடுக்கல் வாங்கல் மற்றும் முட்டை வியாபாரம் செய்து வந்தார். இதனால் அவரிடம் எப்போதும் பணம் இருக்கும் என்று கூறப்படுகிறது. இதனால் அப்துல்கலாம், அடிக்கடி சென்று செலவுக்கு பாட்டியிடம் பணம் பெற்று வந்துள்ளார்.
இந்நிலையில் நேற்று நள்ளிரவு 12 மணி அளவில் அப்துல்கலாம், பாட்டி வீட்டிற்கு குடிேபாதையில் சென்று பணம் தருமாறு கேட்டுள்ளார். காலையில் வா, பணம் தருகிறேன். இப்போது வீட்டிற்கு போ என பாட்டி கூறியுள்ளார். போதையில் இருந்த அப்துல்கலாம், இதனை ஏற்க மறுத்து பாட்டியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு அங்கிருந்த கம்பால் சரமாரியாக தாக்கியுள்ளார். இதில் பலத்த காயம் பாட்டி மும்தாஜ் மயங்கி விழுந்து உயிருக்கு போராடினார். அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக செங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி இறந்தார். தகவல் அறிந்து தென்காசி டிஎஸ்பி கோகுலகிருஷ்ணன் மற்றும் போலீசார் சம்பவ இடம் சென்று விசாரணை நடத்தினர். இதுதொடர்பாக போலீசார் வழக்குபதிந்து தலைமறைவாக உள்ள ஆட்டோ டிரைவர் அப்துல்கலாமை தேடி வருகின்றனர். பாட்டியை பேரனே அடித்து கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.