சிவகங்கை : பழங்கால பொக்கிஷங்கள் புதைந்து கிடக்கும் ஆதிச்சநல்லூரில் குழிகள் தோண்டுவதற்கு தற்காலிக தடை விதித்து மத்திய தொல்லியல் துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. ஸ்ரீவைகுண்டத்தை அடுத்து உள்ள ஆதிச்சநல்லூரில் தமிழக தொல்லியல் துறை சார்பில் அகழாய்வு செய்வதற்காக அதிகாரிகள் கடந்த ஜனவரி 31ம் தேதி இடத்தினை தேர்வு செய்தனர். இந்நிலையில் கடந்த வாரம் மத்திய தொல்லியல் துறை சார்பில் ஆதிச்சநல்லூரில் வேலிகள் அமைக்க ஜேசிபி இயந்திரங்களை கொண்டு குழிகள் தோண்டப்பட்டன.
அப்போது 10த்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் தாழிகள் உடைந்ததால் பலரும் குழி தோண்ட எதிர்ப்பு தெரிவித்தனர்.இதனையடுத்து ஆதிச்சநல்லூரில் ஆய்வு மேற்கொண்ட மத்திய தொல்லியல் துறை அதிகாரிகள் அங்கு இயந்திரங்களை கொண்டு குழிகளை தோண்ட தற்காலிக தடை விதித்து உத்தரவிட்டுள்ளனர். வேலி அமைக்க தோண்டப்பட்ட குழிகள் அனைத்தும் மூடப்பட்டன. இந்த நடவடிக்கை வரவேற்று உள்ள சமூக ஆர்வலர்கள் ஆதிச்சநல்லூரில் கடந்த 2004ம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட அகழாய்வு முடிவுகளை மத்திய தொல்லியல் துறை வெளியிட வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளனர்.