×

பாட்னாவில் வீட்டில் நிகழ்ந்த குண்டு வெடிப்பில் 7 பேர் காயம்..: அருகில் இருந்து வீடுகளும் இடிந்து சேதம்!

பாட்னா: பீகார் மாநிலம் பாட்னாவில் வீட்டில் நிகழ்ந்த குண்டு வெடிப்பில் 7 பேர் காயமடைந்துள்ளனர். பீகார் மாநிலம் பாட்னாவில் காந்தி மைதான் பகுதியில் இருக்கும் வீடு ஒன்றில் வைக்கப்பட்டிருந்த குண்டு திடீரென வெடித்ததாகவும், இதில் அருகிலுள்ள வீடுகளும் முற்றிலுமாக இடிந்து சேதமடைந்துள்ளதாகவும் பாட்னா போலீசார் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர் விரைந்து வந்தனர். அவர்கள் மீட்புப் பணிகளில் ஈடுபட்டு காயமடைந்த 7 பேரை மீட்டனர். பின்னர் அவர்கள் அனைவரும் பாட்னா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். அந்த குண்டு பலத்த சத்தத்துடன் வெடித்ததால் அப்பகுதியில் பதற்றமான சூழல் நிலவியதையடுத்து அப்பகுதியில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் வீட்டில் குண்டு வைத்தவர்கள் யாரென்றும், அது வெடித்ததன் காரணம் குறித்தும், போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில், வீட்டில் இருந்த சிறிய சிலிண்டர் வெடித்திருக்க கூடும் என கூறியுள்ள காவல்துறை கண்காணிப்பாளர், இது குண்டு வெடிப்பா அல்லது சிலிண்டர் வெடித்து விபத்து ஏற்பட்டுள்ளதா என்பது குறித்து விசராணை நடைபெற்றுவதாக கூறியுள்ளார். ஆனால், இந்த வெடி விபத்தானது வீட்டின் படுக்கையறையில் நிகழ்ந்துள்ளது. இதனால், சமயலறையில் உள்ள கேஸ் அடுப்பு மற்றும் சிலிண்டர் பாதுகாப்பாகவே உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில், சிலிண்டர் வெடித்து விபத்து நிகழ்ந்திருந்தால் வீட்டில் தீ பற்றி எரிந்திருக்கும். ஆனால், அவ்வாறு தீ விபத்து எதுவும் நிகழவில்லை. இதனால், விபத்துக்கான காரணத்தை கண்டறிவதில் குழப்பம் ஏற்பட்டுள்ளது.


Tags : Patna ,house bomb explosion , Bihar, Patna, blast
× RELATED பீகார் மாநிலத்தில் கிரேன் மீது ஆட்டோ மோதிய விபத்தில் 7 பேர் உயிரிழப்பு!