×

ஆய்வுக்கு சென்றபோது வழிமறித்த மாடுகள்; கனகன் ஏரி புத்துயிர் பெற்றுள்ளது: கவர்னர் கிரண்பேடி மகிழ்ச்சி

புதுச்சேரி: புதுவை கவர்னர் கிரண்பேடி, வாரயிறுதி நாட்களான சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் ஏரி, குளங்களுக்கு சென்று ஆய்வு மேற்கொண்டு வருகின்றார். அதன்படி, நேற்று காலை, 253வது வார இறுதி ஆய்வுக்காக கனகன் ஏரிக்கு ராஜ்நிவாசில் இருந்து சைக்கிளில் புறப்பட்டு வந்தார். வழியில் ரெட்டியார்பாளையத்தில் சாலையின் குறுக்கே 2 மாடுகள் முட்டி மோதி விளையாடிக் கொண்டிருந்தன. சட்டம் ஒழுங்கு மற்றும் போக்குவரத்து போலீசார் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் பணியில் ஈடுபட்டிருந்த நிலையில், கவர்னருக்கு குறுக்கே மாடுகள் நிற்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். ஆனால் கவர்னர், மாடுகள் முட்டி மோதி சண்டையிட்டு விளையாடுவதை தனது செல்போனில் படம் பிடித்தார்.

கவர்னரை பார்த்த மாடுகள், சண்டையை நிறுத்தி விலகி கொண்டன. தொடர்ந்து, கனகன் ஏரிக்கு சென்ற கவர்னர், அங்கு ஏரிக்கரையோரம் சுற்றிலும் 1400 மீட்டர் தொலைவுக்கு நடைபாதையில் நடப்பட்டுள்ள மரக்கன்றுகள் எப்படி வளர்ந்துள்ளன? என்பதை பார்த்தார். நடப்பட்ட நூற்றுக்கணக்கான மரங்கள் நன்றாக வேரூன்றி செழித்து வளர்ந்திருப்பதை பார்த்தார். ஏரியில் தொடர்ந்து தண்ணீர் சேமித்து வைக்கவும், ஆழமாக வைத்திருக்கவும் கூறினார். அப்போது தான் படகு சவாரியை ரசிக்க முடியும் என அதிகாரிகள் மற்றும் தன்னார்வ குழுவினருக்கு அறிவுறுத்தினார். தொடர்ந்து, கனகன் ஏரி பகுதியில் பள்ளி மாணவர்களின் நாடகம், கலைநிகழ்ச்சிகள் நடந்தது. இதனை கவர்னர் ரசித்து பார்த்தார். பின்னர் அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.

கனகன் ஏரி ஆய்வு குறித்து கவர்னர் வாட்ஸ்அப் பதிவில், கனகன் ஏரி கரையோரம் 1400 மீட்டர் நடைபாதையை பராமரிக்க 5 சமூக குழுக்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.  பள்ளி மாணவர்கள், தன்னார்வ தொண்டு நிறுவனத்தினர் இந்த குழுக்களில் அடங்கியுள்ளனர். அவர்கள், தங்களுக்கென ஒதுக்கப்பட்ட இடங்களில் நடப்பட்டுள்ள மரக்கன்றுகளை தொடர்ந்து தண்ணீர் ஊற்றி பராமரித்து வருகின்றனர். இதில் நூற்றுக்கணக்கான மரங்கள் நன்றாக வேரூன்றி வளர்ந்துள்ளன. குழுவினரின் செயல்பாடுகள் மாதந்தோறும் மதிப்பீடு செய்யப்படும். சிறப்பாக செயல்படும் குழுவினர் ராஜ்நிவாசுக்கு அழைத்து வரப்பட்டு கவுரவிக்கப்படுவார்கள். மேலும், குழுவினர், ஏதாவது உதவி தேவைப்பட்டால், அந்தப்பகுதி பீட் போலீசாரின் நம்பரை வாங்கி வைத்துக் கொள்ள வேண்டும்.

கனகன் ஏரியில் இப்போது கழிவுநீர் இல்லை. மீன்களின் வாழ்க்கை, நீரில் புத்துயிர் பெற்றுள்ளன. சுற்றுப்புற பகுதி மக்களின் பொழுதுபோக்கு இடமாக கனகன் ஏரி மாறியுள்ளது.  காலையில் ஆய்வுக்கு சென்றபோது என் எதிரே சண்டையிட்ட மாடுகள் நான் பார்த்தவுடன் விலகி கொண்டதாகவும் தெரிவித்துள்ளார்.



Tags : Kurnapady ,inspection ,Lake Kanakan , Exploration, guided cows, Canyon Lake
× RELATED பொதட்டூர்பேட்டையில் ஆய்வு அரசு...