×

கரூர்-திருச்சி சாலை தெரசா கார்னரில் செயல்படாத சிக்னலால் வாகன ஓட்டிகள் அவதி: விரைந்து சீரமைக்க கோரிக்கை

கரூர்: கரூர்-திருச்சி சாலை தெரசா கார்னர் சந்திப்பு பகுதியில் சிக்னல் செயல்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. கரூரில் இருந்து திருச்சி, மணப்பாறை மற்றும் கரூர் மாவட்ட பகுதிகளான மணப்பாறை, உப்பிடமங்கலம், குளித்தலை, புலியூர், தரகம்பட்டி, சிந்தாமணிப்பட்டி போன்ற பல்வேறு பகுதிகளுக்கு செல்லும் அனைத்து வாகனங்களும் சுங்ககேட் தாண்டி தெரசா கார்னர் வழியாக சென்று வருகின்றன. இதே இடத்தில், பசுபதிபாளையம், கொளந்தானூர், ராமானூர் போன்ற கரூர் நகரப் பகுதிகளுக்கு செல்லும் சாலையும் பிரிகிறது. இதனால், மூன்று வழிகளில் தெரசா கார்னர் பகுதியில் போக்குவரத்து நடைபெற்று வருகிறது.

மேலும், இந்த தெரசா கார்னர் பகுதியை ஒட்டி அரசு அலுவலகங்களும், பெண்கள் மேல்நிலைப்பள்ளியும் உள்ளன. இதனால், எந்த நேரமும் போக்குவரத்து நடைபெறும் பகுதிகளில் இந்த கார்னர் பகுதியும் ஒன்றாக உள்ளன. முக்கிய சந்திப்பு பகுதிகளில் சிக்னல் அமைக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையின் அடிப்படையில், கடந்த சில மாதங்களுக்கு முன் தெரசா கார்னர் பகுதியில் சிக்னல் அமைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டன. ஆனால், இதுநாள் வரை சிக்னல் செயல்படாமல் உள்ளது. இதனால், திருச்சியில் இருந்து கரூர், கரூரில் இருந்து திருச்சி, பசுபதிபாளையம் போன்ற பல்வேறு பகுதிகளுக்கு செல்லும் அனைத்து தரப்பினர்களும் தானியங்கியாகவே செயல்பட்டு வாகனங்களின் வரத்துக்கு ஏற்ப நின்று நிதானித்து செல்கின்றனர்.

அவ்வப்போது இந்த சந்திப்பு பகுதியில் விபத்துக்களும் நடைபெற்று வருகின்றன. எனவே, சந்திப்பு பகுதியில் அமைக்கப்பட்டுள்ள இந்த சிக்னலை பயன்பாட்டுக்கு கொண்டு வர தேவையான ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Motorists ,road ,Teresa Corner ,Karur-Trichy , Karur-Trichy Road, Signal,
× RELATED மதுரையில் அமித்ஷா ரோடு ஷோவையொட்டி...