தண்டையார்பேட்டை, பிப். 10: ஸ்டான்லி மருத்துவமனையில் காது, மூக்கு, தொண்டை அறுவை சிகிச்சை பிரிவில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. உடனே நோயாளிகள் வேறு இடத்துக்கு மாற்றப்பட்டனர். சென்னை வண்ணாரப்பேட்டையில் உள்ள ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவு, அறுவை சிகிச்சை பிரிவு, இதயம், எலும்பு முறிவு மற்றும் பொது மருத்துவம் ஆகியவற்றுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. இங்கு 100க்கும் மேற்பட்ட டாக்டர்கள், 300க்கும் மேற்பட்ட செவிலியர்கள் பணியாற்றி வருகின்றனர். உள்நோயாளிகளாக 800க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெறுகின்றனர்.
நேற்று முன்தினம் இரவு மருத்துவமனையின் முதல் மாடியில் உள்ள காது, மூக்கு, தொண்டை அறுவை சிகிச்சை பிரிவில் திடீரென தீப்பற்றி எரிந்தது. அப்பகுதி முழுவதும் புகை மண்டலமாக மாறியதால் ஊழியர்கள் வெளியே ஓடி வந்தனர். பின்னர், நோயாளிகளை உடனடியாக பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தினர். தகவலறிந்து தண்டையார்பேட்டையில் இருந்து தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இதில், மின்வயர், மின் இணைப்பு பெட்டிகள் எரிந்து சேதமானது. இதுகுறித்து ஸ்டான்லி மருத்துவமனை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தபோது மின்கசிவு காரணமாக தீப்பற்றி எரிந்தது தெரியவந்தது.