பெரம்பூர்: வியாசர்பாடி சத்தியமூர்த்தி நகர் 49வது பிளாக்கை சேர்ந்தவர் பிரவீன்ராஜ் என்ற கருப்பு அஜித் (24). இவர் மீது எம்கேபி நகர், வியாசர்பாடி காவல் நிலையங்களில் 2 கொலை வழக்கு மற்றும் ஆள்கடத்தல், வழிப்பறி உள்ளிட்ட பல்வேறு வகைகள் உள்ளன.மேலும் எம்கேபி நகர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் தொடர்ந்து வியாபாரிகளை மிரட்டி பணம் கேட்டு தொந்தரவு செய்து வந்துள்ளார். இதுகுறித்து எம்கேபி நகர் காவல் நிலையத்தில் பலர் புகார் கொடுத்து வந்தனர்.
புகாரின்பேரில் இன்ஸ்பெக்டர் ஜார்ஜ் மில்லர் வழக்குப்பதிவு செய்து பிரவீன்ராஜ் என்ற கருப்பு அஜித்தை தேடி வந்தார். இந்நிலையில் நேற்று காலை வியாசர்பாடி முல்லை நகர் சுடுகாடு அருகே போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது போலீசை பார்த்து ஓடிய கருப்பு அஜித்தை போலீசார் மடக்கி பிடித்து கைது செய்தனர். அவரிடம் இருந்து 2 கத்திகள் பறிமுதல் செய்யப்பட்டன. பின்னர் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.