×

ஒருதலை காதலால் விபரீதம் இளம்பெண்ணின் தந்தைக்கு வெட்டு : வாலிபர் கைது

பெரம்பூர்: திருமணத்திற்கு பெண் தராததால் இளம்பெண்ணின் தந்தையை கத்தியால் வெட்டிய வாலிபரை போலீசார் கைது செய்தனர். சென்னை வியாசர்பாடி பகுதியை சேர்ந்தவர் சக்திவேல் (48).  இவரது மகளை வியாசர்பாடி, புது நகர் பகுதியை சேர்ந்த அஜய்குமார் (28) என்பவர் ஒருதலையாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் அஜய்குமார் நேற்று முன்தினம் சக்திவேல் வீட்டிற்கு சென்று, ‘‘உங்கள் பெண்ணை எனக்கு திருமணம் செய்து தாருங்கள்’’ என்று கேட்டுள்ளார். அதற்கு சக்திவேல் மறுப்பு தெரிவித்து, ‘‘வீட்டை விட்டு வெளியே செல்’’ என கூறியுள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த அஜய்குமார் மறைத்து வைத்திருந்த சிறிய கத்தியால் சக்திவேலின் கையை வெட்டி உள்ளார்.  பின்னர் சிறிது நேரத்தில் அங்கிருந்து அஜய்குமார்  தலைமறைவாகியுள்ளார். உடனே அருகில் இருந்தவர்கள் சக்திவேலை மீட்டு  மருத்துவமனையில் சேர்த்தனர். இதுகுறித்து எம்கேபி நகர் காவல் நிலையத்தில் புகார் செய்தனர். புகாரின்பேரில் இன்ஸ்பெக்டர் ஜார்ஜ் மில்லர் வழக்குப்பதிவு செய்து, தலைமறைவாக இருந்த அஜய்குமாரை கைது செய்தனர். பின்னர் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.



Tags : love affair , adulterous love, ,father ,Youth arrested
× RELATED காதல் விவகாரத்தில் வாலிபருக்கு...