நாகை: சட்டசபை கூட்ட தொடரில் காவிரி டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்து தீர்மானம் நிறைவேற்றவில்லை என்றால் மார்ச் மாதம் சட்டசபை முற்றுகை போராட்டம் நடத்தப்படும் என்று தமிழ்நாடு விவசாயிகள் சங்க பொதுச்செயலாளர் சண்முகம் கூறினார்.நாகையில் தமிழ்நாடு விவசாயிகள் சங்க பொதுச்செயலாளர் சண்முகம் நேற்று அளித்த பேட்டி:காவிரி டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும். ஹைட்ரோகார்பன் திட்டத்தை எக்காரணம் கொண்டும் அனுமதிக்க கூடாது என்று பல்வேறு அமைப்புகள் சார்பில் தொடர் போராட்டங்கள் நடத்தப்பட்டது.
இந்நிலையில் தமிழக முதல்வர் காவிரி டெல்டாவை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்துள்ளார். அதற்குரிய சட்டமும் நிறைவேற்றப்படும் என்றும், ஹைட்ரோகார்பன் எடுக்க தமிழக அரசு அனுமதிக்காது என்றும் அறிவித்துள்ளார். வரும் 14ம் தேதி முதல் நடைபெறவுள்ள சட்டசபை கூட்டத்தொடரிலேயே இந்த பிரச்னைக்கு தீர்வு காணும் வகையில் உரிய சட்டத்தை நிறைவேற்ற வேண்டும். அதே நேரத்தில் இதற்காக போராடியவர்கள் மீது போலீசார் பதிவு செய்துள்ள அனைத்து வழக்குகளையும் வாபஸ் பெற வேண்டும். இதை தமிழக அரசு செய்யவில்லை என்றால் வரும் மார்ச் மாதம் சட்டசபை கூட்டத்தொடர் நடைபெறும் போது காவிரிப்படுகை பாதுகாப்பு கூட்டியக்கம் சார்பில் சட்டசபை முற்றுகை போராட்டம் நடத்தப்படும். இவ்வாறு அவர் கூறினார்.