டெல்லி: சீனாவுக்கு சென்ற வெளிநாட்டினர் இந்தியாவுக்கு வந்தால், ஒருபோதும் அனுமதிக்கப்பட மாட்டர்கள் என மத்திய அரசின், சிவில் விமானப் போக்குவரத்துத்துறை இயக்குநரகம் திட்டவட்டமாக தெரிவித்திருக்கிறது. சீனாவின் ஹுபெய் மாகாண தலைநகர் உகானில் இருந்து கடந்த டிசம்பர் மாத இறுதியில் பரவிய கொரோனா வைரஸ் தற்போது அந்நாடு முழுவதும் அசுர வேகத்தில் பரவி வருகிறது. இதனால் நாளுக்கு நாள் உயிரிழப்புகளும் அதிகரித்து வருகின்றன. குறிப்பாக சீனாவில் மிகப்பெரிய பாதிப்பை கொரோனா வைரஸ் ஏற்படுத்தியுள்ளது. கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களை காப்பாற்ற தடுப்பு மருந்துகளை கண்டறியும் சோதனைகள் தீவிரமாக நடந்து வரும் நிலையில், உகான் உள்ளிட்ட சீன நகரங்கள் முற்றிலுமாக மூடப்பட்டு சீல் வைக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், சீனாவில் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு 81 பேர் உயிரிழந்த நிலையில், பலி எண்ணிக்கை 803 ஆக உயர்வடைந்து உள்ளது. கடந்த 2002 மற்றும் 2003ம் ஆண்டுகளில் ஏற்பட்ட சார்ஸ் வைரஸ் தாக்குதலுக்கு 774 பேர் பலியாகி இருந்தனர். இந்த எண்ணிக்கையை விட கொரோனா வைரஸ் பாதிப்புக்கு பலியானோர் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது. இதற்கிடையே, ஹூபே மாகாணத்தில் தவித்த இந்தியர்களை மீட்க உதவியதற்காக சீன அதிபர் ஷி ஜின்பிங்கிற்கு பிரதமர் நரேந்திர மோடி நன்றி தெரிவித்து எழுதிய கடிதத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பை தடுக்க இந்தியா உதவத் தயார் என்றும் குறிப்பிட்டுள்ளார். மேலும், கொரோனா வைரஸ் காரணமாக சீனாவில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், மத்திய அரசின், சிவில் விமானப் போக்குவரத்துத்துறை இயக்குநரகம் சார்பில் அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. கடந்த ஜனவரி மாதம் 15-ம் தேதி மற்றும் அதற்கு பின்னர், சீனாவிற்கோ, அல்லது, அதன் நகரங்கள் வழியாகவோ பயணித்த வெளிநாட்டினர், இந்தியாவுக்கு வர வேண்டாம் எனக் கேட்டுக்கொண்டிருக்கிறது. சீனா மட்டுமின்றி, அதன் அண்டை நாடுகளுக்கு சென்றிருந்தால், இந்தியாவிற்குள், அவர்களை அனுமதிப்பது, ஐயத்திற்குரிய விடயம்தான் என்றும் சுட்டிக்காட்டியிருக்கிறது. இந்திய-நேபாளம், இந்தோ-பூட்டான், இந்திய-மியான்மர் எல்லைகள் வழியாக, சாலை மார்க்கமாகவும், கடல்வழி மார்க்கமாகவும், வெளிநாட்டினருக்கு அனுமதியில்லை என்றும், சிவில் விமானப் போக்குவரத்துத்துறை திட்டவட்டமாக அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.