×

சாலையில் நடக்கவே அச்சம் குமரியில் சுட்டெரிக்கும் வெயில் கொடுமை: குளிர்பான கடைகளில் கூட்டம் அலைமோதல்

நாகர்கோவில்: குமரியில் பகலில் வாட்டி வதைக்கும் வெயிலால் மக்கள் கடும் அவதிக்குள்ளாகி உள்ளனர். இதனால் குளிர்பான கடைகளில் கூடடம் அலைமோதி வருகிறது.குமரி மாவட்டத்தில் கடந்த டிசம்பர் மாதம் வரை மழையின் தாக்கம் இருந்தது. இந்த மழை காரணமாக தற்போது நீர் நிலைகளில் போதிய அளவு தண்ணீர் இருப்பு உள்ளது. குளங்களும் நிரம்பி உள்ளன. இந்த நிலையில் கடந்த ஜனவரி பொங்கலுக்கு பின், வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளது. காலை 10 மணியில் இருந்தே வெயிலின் தாக்கம் தொடங்கி விடுகிறது. பகல் 12 மணிக்கெல்லாம் சாலையில் நடந்து செல்ல முடியாத அளவுக்கு  வெயில் சுட்டெரிக்கிறது. வெயிலின் தாக்கத்தால் சாலையில் நடந்து செல்பவர்கள் கடும் சிரமம் அடைகிறார்கள். மேலும் வீடுகளில் பேன், ஏ.சி. இல்லாமல் இருக்க முடியாத நிலை உள்ளது. வெயிலின் கொடுமை அதிகரித்து உள்ளதால் மக்கள் குளிர்ச்சியான இடங்களை தேடி செல்கிறார்கள். தாகத்தை தீர்க்க குளிர்பான கடைகளில் கூட்டம் அலைமோதி வருகிறது. கரும்புசாறு, பழச்சாறு, தர்ப்பூசணி மற்றும் பழங்கள் வியாபாரம் சூடுபிடித்துள்ளது. மோர், கூல்டிரிங் வியாபாரமும் கடைகளில் சூடுபிடித்துள்ளன.நாகர்கோவில் நாகராஜா கோயில் தேரோட்டம் நேற்று நடைபெற்றது.

வெயிலின் தாக்கத்தால் தேரோட்டத்தை காண வந்த பக்தர்கள், ரத வீதிகளில் வினியோகம் செய்யப்பட்ட மோர், குளிர்பானம் மற்றும் பானகம் ஆகியவற்றை குடிப்பதில் ஆர்வம் காட்டினர். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை போட்டி போட்டு வாங்கி சென்றனர். தர்ப்பூசணி வியாபாரமும் அதிகரித்துள்ளது. வெயிலின் தாக்கத்தில் இருந்து தற்காத்து கொள்ள போதிய அளவு குடிநீர் அருந்த வேண்டும்.
சாலையில் நடந்து செல்லும் போது குடைகளை பயன்படுத்த வேண்டும். இறுக்கமான ஆடைகளை அணிய வேண்டாம் என டாக்டர்கள் அறிவுரை கூறி உள்ளனர். வழக்கமாக ஏப்ரல், மே மாதங்களில் தான் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும். ஆனால்  பிப்ரவரி மாதத்திலேயே ெவயில் கொடுமை அதிகரித்து இருப்பது மக்களுக்கு பெரும் அவதியை உண்டாக்கி உள்ளது.

Tags : road ,Kumari The Tide of Heat ,Crowds ,Cold Stores , Road, Kumari, Vail, Cold Drink Shop
× RELATED மதுரையில் அமித்ஷா ரோடு ஷோவையொட்டி...