மணப்பாறை: திருச்சி மற்றும் புதுக்கோட்டையில் இன்று ஜல்லிக்கட்டுப் போட்டி நடந்தது. இதில் 1440 காளைகள் சீறி பாய்ந்தன. காளைகள் முட்டியதில் 16க்கும் அதிகமான வீரர்கள் காயமடைந்தனர்.திருச்சி மாவட்டம், மணப்பாறை அடுத்த மஞ்சம்பட்டியில் புனித வனத்து அந்தோணியார் ஆலய திருவிழாவையொட்டி இன்று (9ம் தேதி) காலை 9 மணிக்கு தேவாலயம் முன்பு அமைக்கப்பட்டிருந்த வாடிவாசலில் ஜல்லிக்கட்டு போட்டி நடந்தது. இதில் 720 காளைகள், 400 மாடுபிடி வீரர்கள் பங்கேற்றனர். காளைகள், வீரர்களுக்கு மருத்துவ குழுவினர் பரிசோதனை செய்தனர்.
அதனை தொடர்ந்து ஜல்லிக்கட்டு போட்டி துவங்கியது. முதலில் கோயில் காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. அடுத்தடுத்து ஜல்லிக்கட்டு காளைகள் களமிறக்கப்பட்டன. சீறி பாய்ந்த காளைகளை வீரர்கள் அடக்கினர். இதில் 10க்கும் அதிகமானோர் காளைகள் முட்டி காயமடைந்தனர்.போட்டியில் வெற்றி பெற்ற வீரர்கள், பிடிபடாத காளைகளின் உரிமையாளர்களுக்கு குக்கர் உள்ளிட்ட பல்வேறு பரிசுகள் வழங்கப்பட்டது. திருச்சி மாவட்ட எஸ்.பி, ஜியாவுல்ஹக் தலைமையில், மணப்பாறை டி.எஸ்.பி. குத்தாலிங்கம், மேற்பார்வையில் 300க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
திருமயம்
புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே குலமங்கலம் மலையக்கோயிலில் தைப்பூச திருவிழாவையொட்டி கோயில் திடலில் இன்று காலை 11 மணிக்கு ஜல்லிக்கட்டு போட்டி துவங்கியது. இதில் சிவகங்கை, திருச்சி, புதுக்கோட்டை, மதுரை உள்பட பல்வேறு பகுதிகளிலிருந்து 720காளைகள், 130 மாடுபிடி வீரர்கள் பங்கேற்றனர். சீறி பாய்ந்த காளைகளை வீரர்கள் விரட்டி பிடித்து அடக்கினர். காளைகள் முட்டியதில் 6 பேர் காயமடைந்தனர்.
பஸ் ஸ்டாண்டில் ஜல்லிக்கட்டு
ஜல்லிக்கட்டுப் போட்டியில் பங்கேற்ற சமயபுரத்தை சேர்ந்த ஜல்லிக்கட்டு காளை 3 கி.மீ. தூரம் ஓடிச் சென்று மணப்பாறை பஸ் நிலையத்திற்குள் புகுந்தது. அங்கு பேருந்துக்காக நின்றிருந்த 65 வயது மதிக்கத்தக்க பயணி ஒருவரை தொடையில் முட்டி தூக்கி வீசியது. இதில் படுகாயமடைந்த அவர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.