வானூர்: ஆரோவில் உதய தினத்தை யொட்டி இன்று காலை மாரத்தான் ஓட்டப் போட்டி நடைபெற்றது. இதில் வெளிநாட்டினர் உட்பட 3 ஆயிரம் பேர் கலந்து கொண்டு ஓடினர். புதுச்சேரி அடுத்துள்ள தமிழக பகுதியான விழுப்புரம் மாவட்டம் ஆரோவில் சர்வதேச நகரத்தில் உலக அமைதி, சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் ஆரோவில் உதயமான தினத்தையொட்டி 13வது மாரத்தான் ஓட்டம் இன்று காலை நடந்தது. அதிகாலை 5 மணியளவில் 42 கிலோ மீட்டர் பிரிவும், 6.15 மணிக்கு 21 கிலோ மீட்டர் பிரிவும், 7 மணிக்கு 10 கிலோ மீட்டர் பிரிவும், 7.15 மணிக்கு 5 கிலோ மீட்டர் பிரிவும் துவங்கியது. இதில் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள், ஆரோவில் வாசிகள், சுற்றுவட்டாரத்தை சேர்ந்த இளைஞர்கள் என 3 ஆயிரம் பேர் பங்கேற்றனர்.
ஆரோவில் மாத்திர் மந்திர் பகுதியில் துவங்கிய மாரத்தான் ஓட்டம் தோட்டக்கரை, இரும்பை, குயிலாப்பாளையம், இடையஞ்சாவடி வழியாக மீண்டும் ஆரோவில்லை வந்தடைந்தது. 21 கிலோ மீட்டர் பிரிவில் தமிழக காவல்துறை ஐஜி முருகன், சென்னை முன்னாள் மேயர் மா.சுப்பிரமணியன் எம்எல்ஏ ஆகியோர் கலந்து கொண்டு ஓடினர். 5 கிலோ மீட்டர் பிரிவில் பெண்கள் மற்றும் சிறுவர்கள் பங்கேற்றனர்.