×

ரயிலில் சென்னைக்கு கடத்திய 4 கிலோ கஞ்சா பறிமுதல்: வாலிபர் கைது

சென்னை: சென்னை சென்ட்ரல் ரயில் நிலைய 6வது நடைமேடை அருகே நேற்று முன்தினம் சந்தேகப்படும் படியாக நின்று கொண்டிருந்த ஒரு நபரை ஆர்பிஎப் போலீசார் அழைத்து விசாரணை செய்தனர். அப்போது, அவர் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்துள்ளார். இதனால், போலீசார் அவர் கையில் வைத்திருந்த பையை சோதனை செய்தபோது, அதில் 4.5 கிலோ கஞ்சா பொட்டலம் இருப்பது தெரியவந்தது. விசாரணையில், அவர் புதுவண்ணாரப்பேட்டை பகுதியை சேர்ந்த ராஜேஷ் (19) என்பதும், ஆந்திர மாநிலத்தில் இருந்து ரயில் மூலம் சென்னைக்கு கஞ்சா கடத்தி வந்ததும் தெரிந்தது. அவரை கைது செய்து, அவரிடமிருந்து கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர்.

மற்றொரு சம்பவம்: கொடுங்கையூரில் உள்ள ஒரு வீட்டில் கஞ்சா விற்பனை செய்த அசோக்குமார் (45) என்பவரை போலீசார் நேற்று கைது செய்தனர். விசாரணையில், இவர் மொத்த வியாபாரி என்பதும், கொடுங்கையூர் எம்ஆர் நகரை சேர்ந்த நவீன்ராஜ் (32), பார்வதி நகரை சேர்ந்த செந்தில்குமார் (31), மணலியை சேர்ந்த பைசல் முகமது (32) ஆகியோரிடம் கஞ்சா கொடுத்து பல்வேறு பகுதிகளில் விற்பனை செய்ததும் தெரிந்தது. அவர்களையும் போலீசார் கைது செய்து, 2 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

* அரும்பாக்கம் என்எஸ்கே நகரை சேர்ந்தவர் ரஞ்சித் (23). பிரபல ரவுடியான இவர் மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளதால் போலீசார் தேடி வந்தனர். இந்நிலையில், அரும்பாக்கம் சுடுகாடு பகுதியில் பதுங்கியிருந்த அவரை நேற்று போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
* அம்பத்தூர் தொழிற்பேட்டை ஐடிஐ எதிரே சிடிஎச் சாலையில் உள்ள ஆரோக்கிய ஜெபராஜ் (35) என்பவரின் டீக்கடை பூட்டை நேற்று முன்தினம் இரவு உடைத்த மர்ம நபர்கள், கல்லா பெட்டியில் இருந்த ₹15 ஆயிரம், ₹5 ஆயிரம் மதிப்புள்ள சிகரெட் பாக்கெட்டுகளை திருடிச் சென்றனர்.
* மூவரசன்பட்டு பகுதியை சேர்ந்த ஜெபசிங் என்பவரின் பைக்கை திருடி சென்ற பொழிச்சலூர் பகுதியை சேர்ந்த தேவராஜ் (42) என்பவரை போலீசார் கைது செய்தனர்.

Tags : Chennai , Rail, Chennai, Ganja seizure
× RELATED தொழில்நுட்ப கோளாறால் சென்னையில்...