பல்லாவரம்: ஜமீன் பல்லாவரத்தை சேர்ந்தவர் அஸ்வினி (39). (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இந்திய மருத்துவ ஆராய்ச்சி தொழில்நுட்ப அதிகாரி. இவர் நேற்று முன்தினம் இருசக்கர வாகனத்தில். பல்லாவரம் கார்டன் சாலையில் சென்றபோது, பைக்கில் பின்தொடர்ந்து வந்த மர்ம நபர், அஸ்வினியிடம் ஆபாசமாக பேசி, பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார். இதனால், அதிர்ச்சியடைந்த அஸ்வினி கூச்சலிட்டதால், மர்ம நபர் அங்கிருந்து தப்பினார். இதுகுறித்து அஸ்வினி பல்லாவரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில், போலீசார் வழக்குப் பதிவு செய்து, சம்பவ இடத்தில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர்.
அதில், அந்த மர்ம நபரின் வாகன பதிவு எண் பதிவாகி இருந்தது. அதனை வைத்து விசாரித்தபோது, பெண் அதிகாரிக்கு பாலியல் தொல்லை கொடுத்தது, திரிசூலம் பகுதியை சேர்ந்த ஆரோக்கியதாஸ் (34) என்பது தெரியவந்தது.
அவரை கைது செய்தனர். மேலும் விசாரணையில், ஆரோக்கியதாஸ் இதுபோன்று சாலையில் தனியாக வரும் பல பெண்களிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டது தெரியவந்தது. அவர் மீது பெண் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார், தாம்பரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.